தனது போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு கூடியிருந்த ரசிகர்களுக்கு, நடிகர் ரஜினிகாந்த் நேரில் தீபாவளி வாழ்த்துக்கள் கூறினார்.
நாடு முழுவதும் இன்று (நவம்பர் 6) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. காலையில் எழுந்து எண்ணெய் குளியலிட்டு பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை பரிமாறி மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மலர்க்கொத்துடன் முதல்வர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், “ தங்கள் வாழ்வில் அமைதி, வளம், நல்ல உடல்நலம் ஆகியவற்றை தீப ஒளித் திருநாள் கொண்டுவரட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு இன்று காலை முதலே நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்தனர். இதனையடுத்து வீட்டிலிருந்து வெளியே வந்த ரஜினிகாந்த், அங்கு கூடியிருந்த ரசிகர்களைப் பார்த்து கையசைத்து, தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். தமிழக மக்கள் அனைவருக்கும் தனது தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.�,