பெரும் நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் முதல் தெருவோர கடைகள் வரை மின்னணு பரிவர்த்தனை (டிஜிட்டல் பேமன்ட்) முறை உள்ளே நுழைந்துவிட்டது. ஏதேனும் ஒரு பேமன்ட் ஆப்பில் உங்களின் வங்கிக் கணக்கை இணைத்துக்கொண்டு அந்த ஆப் மூலம் சுலபமாகப் பணம் செலுத்த முடியும். கோட் ஸ்கேனர், மொபைல் எண், ஐடி, அக்கவுன்ட் நம்பர் எனப் பல ஆப்ஷன்கள் இதற்காக உருவாக்கப்பட்டிருக்கின்றன.
அதேபோல், போன் பில், கேஸ் பில், மின்சாரக் கட்டணம் எனப் பலவற்றை இன்று இவ்வகை ஆப்களின் மூலம் செலுத்திவிட முடியும். இந்த நிலையில் சமூக ஊடக நுட்பங்கள், தொலைபேசி அழைப்புகள் என பலவற்றின் வாயிலாக மக்களை ஏமாற்றும் போக்கு சமீப காலமாக அதிகரித்துள்ளது. எனவே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு, பொதுமக்களை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
மக்கள் போலியான தொலைபேசி அழைப்புகள், தெரியாத லிங்குகள், தவறான அறிவிப்பு செய்திகள், அங்கீகரிக்கப்படாத க்யூஆர் குறியீடுகள் போன்றவை குறித்து மிகவும் விழிப்புடன் இருக்குமாறும், ரிசர்வ் வங்கி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
ஹேக்கர்கள், வங்கிக் கணக்குகள் சம்பந்தமான அடையாள எண், பாஸ்வேர்டு, டெபிட், கிரெடிட் கார்டுகள் குறித்த தகவல்கள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்காக, பல்வேறு விதமாக தங்களது அடையாளங்களை மாற்றி அமைத்து பொதுமக்களை ஏமாற்ற முயற்சி செய்து வருகின்றனர்.
எனவே, டிஜிட்டல் பேங்கிங் வாயிலாக பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, இழப்பை தவிர்க்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
**-ராஜ்**
�,