தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழ்நாடு வக்பு வாரியத் தேர்தல் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற்றது. தலைவர் பதவிக்கு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா போட்டியிட்டார். பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி நடைபெற்ற தேர்தலில், வக்பு வாரியத் தலைவராக அன்வர் ராஜா எம்.பியை வாரியத்தின் உறுப்பினர்கள் ஒருமனதாகத் தேர்வு செய்தனர். இதையடுத்து முதல்வர், துணை முதல்வரை சந்தித்து வாழ்த்தும் பெற்றார்.
சென்னை மண்ணடியில் உள்ள வக்பு வாரிய அலுவலகத்தில் இன்று (மே 12) தலைவராக அன்வர் ராஜா முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். நிகழ்வில் அமைச்சர்கள் ஜெயக்குமார், நிலோபர் கபில், முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு கடந்த 21 வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இஸ்லாமிய மதத்தை மதிக்கின்ற அரசு தமிழக அரசு. இஸ்லாமிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியவர் ஜெயலலிதா. சாதி, மத பேதமில்லாமல் அனைவரும் ஒன்றுபட்ட சகோதரத்துவத்துடன் வாழ்கிற மாநிலமாக தமிழகம் விளங்குகிறது” என்று குறிப்பிட்டார்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று கனிமொழி கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “சட்டம்-ஒழுங்கு குறித்து திமுக பேசக்கூடாது. திமுக ஆட்சிக்காலத்தில் சட்டக் கல்லூரி தடியடி உள்பட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்றது. அதிமுக ஆட்சியில் இன்று தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கிறது. எஸ்.வி.சேகர் விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவைத் தமிழக அரசு நிறைவேற்றும்” என்றும் தெரிவித்தார்.�,”