இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், கே.எல்.ராகுல் பேட்டிங் குறித்துப் பாராட்டியுள்ளார்.
இந்திய அணியில் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வருகிறார் கே.எல்.ராகுல். கடந்த ஐபிஎல்லில் தனி ஒருவராக நின்று கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பல வெற்றிக்கு உதவியதால் தேர்வாளர்களின் கவனத்தைப் பெற்று இந்திய லெவனில் திரும்பவும் இடம்பிடித்தார். அதன்பின் சிறப்பாக விளையாடி அந்த இடத்தைத் தக்கவைத்தும் வருகிறார்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அவரை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். அது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்தில் தெரிவித்துள்ள அவர், “தற்போது இந்திய அணியில் இடம்பெற்றுள்ள கே.எல்.ராகுல் அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருவாரென்பது முதல் டி20 போட்டியில் அவர் ஆடியதில் இருந்தே தெரிகிறது. நான் கே.எல்.ராகுலை முதல் போட்டியில் இருந்தே கவனித்து வருகிறேன். குறிப்பாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது, முதல் போட்டியில் ஜான்சன் வீசிய பந்தை அபாரமாக பவுண்டரிக்கு விளாசினார். அப்போதிருந்து அவரின் க்ளாஸான ஆட்டத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்.
இங்கிலாந்து பௌலர்களின் அச்சுறுத்தல் தெரிந்த ஒன்றுதான். ஆனாலும் எந்தவித கடினமும் இன்றி எளிதாக பவுண்டரிகள் விளாசுகிறார் கே.எல்.ராகுல். அதுவும், இங்கிலாந்தில் இப்படி விளையாடுவது சாதாரணமானது அல்ல” என்றார்.�,