புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு நேற்று மே 30ஆம் தேதி 70வது பிறந்த தினமாகும். பிறந்தநாளையொட்டி, முதல்வர் அமைதியாக மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று விட்டார். முன்னதாக, கட்சித் தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் நேற்று முன்தினம் மே 29ஆம் தேதி, இந்த வருடம் நான் பிறந்த நாள் விழா கொண்டாடவில்லை. எனது பிறந்த நாளுக்கு யாரும் விளம்பர போர்டுகள், ஆளுயுர கட் அவுட்கள் போன்றவைகளை வைக்கக்கூடாது. விளம்பர பேனர்கள்தான் எனக்கு முதல் எதிரி, மீறிவைத்தால் அவைகள் அகற்றப்படும் என்றும் வாய்மொழி உத்தரவிட்டார்.
அதையடுத்து, புதுச்சேரி அதிகாரிகளுக்கு முதல்வர் அவசர உத்தரவிட்டார். யாரவது பிறந்தநாள் விளம்பர போர்டுகள் வைத்திருந்தால் உடனே அகற்றுங்கள் என்று தெரிவித்து நேற்று முன்தினம் மே 29ஆம் தேதி இரவு ரோந்து பணி சென்றவர் கண்களில் பட்ட விளம்பரங்களைப் பார்த்து, நகராட்சி அதிகாரிகளைத் தொடர்புகொண்டு உடனே அகற்றச் சொன்னார்.
புதுச்சேரியில் சாதாரண எம்.எல்.ஏ, வாரியத் தலைவர், நகரத்தலைவர் என்றாலே டிஜிட்டல் பேனர்களால் புதுச்சேரி முழுவதும் வைப்பது வழக்கம். முன்னாள் முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் விழாவின்போது பாகுபலி போலவும், நடிகர்கள் போலவும், போலீஸ் அதிகாரிகள் போலவும் விளம்பர பேனர்களால் புதுச்சேரியை மூழ்கடிப்பார்கள். ரங்கசாமியும், இரவு நேரங்களில் தனியாக சென்று விளம்பரங்களைப் பார்த்து ரசித்ததும் உண்டு.
அப்படிப்பட்ட புதுச்சேரியில் டிஜிட்டல் விளம்பர பேனர்கள், போர்டுகள் இல்லாமல் சத்தமின்றி எளிமையான முறையில் பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் நாராயணசாமி செயல்களைக் கண்டு புதுச்சேரி மக்கள் தங்கள் நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்கள்.�,