டெல்லியில், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட 10 வகுப்பு மாணவியை வகுப்புக்குள் அனுமதிக்க மறுக்கும் பள்ளியின் நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் பள்ளி ஒன்றில் 10 வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் காரில் கடத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். பின்னர், காரில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.
இந்நிலையில், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட தங்கள் மகளை வகுப்புக்குள் அனுமதிக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது மாணவியின் பெற்றோர் டெல்லி மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதில், ‘ என் மகளை வகுப்புக்குள் அனுமதித்தால் பள்ளியின் பெயர் கெட்டு விடும் என்பதற்காக வகுப்புக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர். என் மகள் பள்ளிக்கு செல்லாமல் இருந்தால் மட்டுமே 11 ஆம் வகுப்புக்கு அனுமதிப்போம் என பள்ளி நிர்வாகம் தெரிவிக்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி நிர்வாகம் பல்வேறு விதத்தில் மாணவியை தொந்தரவு செய்வதால், அந்த மாணவி பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டதாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர் என டெல்லி மகளிர் ஆணையம் கல்வித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து, டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால், ‘ பள்ளி மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க அரசுக்கு 5 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னை மிகவும் முக்கியமானது. செய்யாத தவறுக்கு அந்த மாணவி தண்டிக்கப்பட்டுள்ளார். இது மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இன்றைய உலகில் இது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்’ என தெரிவித்துள்ளார்.
�,