சென்னைப் பல்கலைக்கழகம் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் காகிதப் பயன்பாட்டை நிறுத்தி டிஜிட்டல் மயத்துக்கு மாற முடிவு செய்துள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகம் கடந்த 1857ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 160 ஆண்டுகளைக் கடந்து இன்றும் சிறப்புடன் செயல்பட்டுவரும் சென்னைப் பல்கலைக்கழகம் இந்தியாவில் உள்ள பழைமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், அதிகரித்துவரும் செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காகிதப் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து டிஜிட்டல் பயன்பாட்டுக்கு மாறச் சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
பல்கலைக்கழகக் கூட்டங்கள் தொடர்பான முக்கிய கோப்புகள் அனைத்தும் இ.மெயில் மூலமாகவே இனி பரிமாற திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இத்தகைய முடிவை எடுக்கும் முதல் கல்வி நிறுவனம் சென்னைப் பல்கலைக்கழகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆண்டுக்கு இரண்டு கல்வி கவுன்சில் சந்திப்பு, இரண்டு செனட் கூட்டங்கள் மற்றும் குறைந்தது 12 சிண்டிகேட் கூட்டங்கள் நடைபெறுகின்றன. நிகழ்ச்சி நிரல் மற்றும் கூட்டம் தொடர்பான தகவல்களை உறுப்பினர்களுக்குத் தெரிவிப்பதற்காக ஏராளமான நோட்டீஸ்கள் அடிக்கப்படுகின்றன. இதற்காக அதிகளவில் பணமும் விரயமாகிறது. எனவே, இதைக் கட்டுப்படுத்தவே இந்த முடிவு மேற்கொள்ளப்படுவதாகப் பல்கலைக்கழகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பேப்பர், பிரின்டர் செலவு போன்றவற்றை 70 சதவிகிதம் குறைக்க முடியும் என்று நிர்வாகம் எதிர்பார்க்கிறது. அதேநேரத்தில், நியமனங்கள் மற்றும் நிதி சார்ந்த விஷயங்கள் சில காலத்துக்குக் காகிதங்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படும் என்று சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.�,