கோயம்பேட்டில் ஐந்து டன் ரசாயன பழங்கள் பறிமுதல்!

public

சென்னை கோயம்பேட்டில் ரசாயனம் பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட ஐந்து டன் பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று காலை (மார்ச் 11) பறிமுதல் செய்தனர்.

கோடைக்காலத்தில் பழங்களுக்கான தேவை எப்போதும் அதிகமாக இருக்கும் என்பதால், பழங்களை விரைவாகப் பழுக்கவைக்க செயற்கை முறையில் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. கோயம்பேட்டில் அனைத்து வாழைத்தார்களிலும் ரசாயன கலவையைப் பயன்படுத்தி பழுக்கவைத்து உடனடியாக விற்பனைக்கு அனுப்பப்படுவதாகப் புகார் எழுந்தது. வாழை மண்டி ஊழியர்கள் புரொபலைன் (propylene) என்ற ரசாயனத்தை நீரில் கலந்து அதில் வாழைத்தார்கள் மேல் ஊற்றிக் கழுவுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று அதிகாலை திடீரென சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் ரசாயனம் பயன்படுத்தி பழங்களைப் பழுக்கவைப்பது தெரியவந்தது. உடனடியாக ரசாயனம் பயன்படுத்திய ஐந்து டன் பழங்களைப் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள், “பழ வியாபாரிகள் செயற்கை முறையில் ரசாயனங்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்கவைப்பதாகத் தொடர்ந்து, புகார்கள் வந்தன. எனவே, இன்று அதிகாலை கோயம்பேட்டில் திடீரென சோதனை நடத்தினோம். சோதனையில், பழ வியாபாரிகள் செயற்கை முறையில் பழுக்கவைத்த ஐந்து டன் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படும். ரசாயனம் பயன்படுத்தப்பட்ட பழங்கள் புற்றுநோயை உருவாக்கும். எனவே, வியாபாரிகள் ரசாயனத்தைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோயம்பேட்டில் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழம், சப்போட்டா, பப்பாளி உள்ளிட்ட 4,000 கிலோ பழங்களையும், பழங்களை பழுக்கவைக்கப் பயன்படுத்தப்பட்ட 75 கிலோ கால்சியம் கார்பைடு கற்களையும் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *