உத்தரப் பிரதேசத்தில் கிஸ்துவ பள்ளிகளில் படிக்கும் இந்து மாணவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட அனுமதிக்கக் கூடாது எனப் பள்ளி நிர்வாகத்துக்கு இந்து அமைப்புகள் நேற்று (டிசம்பர் 17) கோரிக்கை விடுத்துள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கிறிஸ்துவர்கள் போல் வேடமணிந்து கலைநிகழ்ச்சிகள் நடத்துவார்கள்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகாரில் உள்ள பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் கிறிஸ்துவப் பள்ளிகளாக உள்ளன. அப்பள்ளிகளில் கிறிஸ்துவ மாணவர்கள் மட்டுமல்லாமல் இந்து மாணவர்களும் கல்வி பயின்றுவருகின்றனர்.
இந்நிலையில், இந்து மாணவர்களை வைத்து கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப் பள்ளி நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது என யோகி ஆதித்யநாத் இந்து யுவ வாஹினி மற்றும் இந்து ஜகார்மன் மஞ்ச் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்து ஜகார்மன் மஞ்ச்சின் தலைவர் சோனு சவிதா, “கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப் பொம்மைகள், பரிசுப் பொருட்கள் கொண்டு வர வேண்டும் என மாணவர்களைப் பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது. இது இந்து மாணவர்களின் மனநிலையை பாதிக்கக்கூடும். எனவே எங்களின் கோரிக்கைகளை பள்ளிகள் ஏற்க வேண்டும். இந்து மாணவர்களை கிறிஸ்துமஸ் கொண்டாட அனுமதிக்கக் கூடாது. இல்லையென்றால் மோசமான விளைவுகளை சந்திக்கக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.�,