�
‘நான் பிறந்ததே காவிரி டெல்டாவில் தான், எனக்கு காவிரியின் வரலாறு தெரியாதா’ என்று துணை முதல்வருக்கு ஆர்கே நகர் எம்.எல்.ஏ தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘தமிழகம் தலைநிமிரட்டும், தமிழர் வாழ்வு மலரட்டும்’ என்ற முழக்கத்துடன் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் டிடிவி தினகரன் மக்களை சந்தித்து வருகிறார். தஞ்சை மாவட்டம் சோழபுரத்தில் தொடங்கிய சுற்றுப்பயணம் முன்றாம் நாளான இன்று, பாபநாசத்தில் மக்களை சந்தித்து வருகிறார்.
துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, காவிரி வழக்கு கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்றும் டிடிவி தினகரனுக்கு காவிரி வழக்கின் சரித்திரம் தெரியாது என்றும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
தனது சுற்றுப்பயணத்தின் மூன்றாவது நாளான இன்று (பிப்ரவரி 4) பாபநாசத்தில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், எனக்கு காவிரி வரலாறு தெரியாது என்கிறார்கள், தினகரன் பிறந்ததே காவிரி டெல்டாவில் தான், தினகரனுக்கு காவிரி நதிநீர் சரித்திரம் தெரியாமல் எப்படி இருக்கும் ” என்று துணை முதல்வருக்கு பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து பேசும்போது, “தமிழக அரசு கடந்த மாதமே நீதிமன்றம் சென்று காவிரிநீரை பெற்று தர நடவடிக்கை எடுக்காததால் தான், சம்பா பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பிறந்த எனக்கு காவிரியின் சரித்திரம் தெரியாது என்று சொல்லும் போதே பதவி எவ்வாறு கண்ணை மறைக்கிறது பழசை மறைக்கிறது என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும்” என்றும் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.�,”