மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அதிகாரிகள் நிதி கையாண்ட விவகாரம் தொடர்பான மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் மழை நீர் சேகரிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும், தனியார் நிலங்களில் இலவசமாக கிணறு தோண்டி கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணியில் அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பணியமர்த்தப்பட்டு, அவர்களுக்கு தினமும் ரூ.100 ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் நிலத்தில் கிணறு வெட்டாமல், அதற்கு ஒதுக்கிய நிதியை, இளநிலை பொறியாளரும், பஞ்சாயத்து யூனியன் மேற்பார்வையாளரும் கையாடல் செய்துள்ளதாக கூறி, பெரம்பலூர் மாவட்டம், நூத்தாப்பூர் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி உள்பட மூன்று பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், வட்டார வளர்ச்சி அதிகாரி, இளநிலை பொறியாளர் மற்றும் பஞ்சாயத்து யூனியன் கண்காணிப்பாளர் மீது அளித்த புகாரில் திட்ட உதவி அதிகாரி விசாரணை நடத்தி, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை” என குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம், நீதிபதி சேஷசாயி அடங்கிய அமர்வு, இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. மேலும், இந்த முறைகேடு தொடர்பாக விசாரித்த திட்ட உதவி அதிகாரி, விசாரணை அறிக்கையை ஒரு வாரத்தில் மாவட்ட ஆட்சியருக்கு அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் மேல் விசாரணை நடத்தி, மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.�,”