இந்தியச் சினிமாவானது கதை மற்றும் உள்ளடக்கத்தை விட அதன் தொழில்நுட்பத்தில் மற்ற நாடுகளின் சினிமாவோடு போட்டி போடும் அளவுக்கு முன்னேறிவருகிறது. கேமிராக்களில் தினம் ஒரு அப்டேட் வந்துகொண்டிருக்கும் போது அதை உடனடியாக உபயோகித்துப் பார்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது இந்தியச் சினிமா.
இந்தியாவில் 4K ரெசலூசன் கொண்ட கேமராக்களே தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் நிலையில் முதல்முறையாக 8K ரெசலூசன் கொண்ட கேமிரா மூலம் ஒரு படம் உருவாகவுள்ளது.
‘உன்னைப் போல் ஒருவன்’, ‘பில்லா 2’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சக்ரி டொலட்டி தற்போது நயன்தாரா நடித்து வரும் ‘கொலையுதிர்க்காலம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபுதேவா, தமன்னா நடிக்கவுள்ளனர். மேலும் நடிகை பூமிகா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். ‘காமோஷி’ என்ற பெயரில் உருவாகவுள்ள இந்தப் படம் முழுக்க முழுக்க 8K ரெசலூசன் கேமிராவில் படமாக்கப்படவுள்ளதால் இதுவே இந்தியாவின் முதல் 8K படம் என்ற பெருமையைப் பெறுகிறது.
இதுகுறித்துப் பிரபுதேவா தனது டிவிட்டர் பக்கத்தில் , ‘இந்தியாவின் முதல் 8K தொழில்நுட்பத்தில் உருவாகும் படத்தில் நான் நடிக்கவுள்ளேன் என்பது எனக்குப் பெருமையாக உள்ளது. இதற்கு இயக்குனர் சக்ரி டொலட்டி, தயாரிப்பாளர் வாஷூ பாக்னானி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
பல இந்தியத் திரையரங்குகள் இன்னும் 4K ரெசலூசனுக்கே இன்னும் தயாராகாத சூழலில் 8K ரெசலூசனில் தயாராகும் படங்களின் தரத்தைப் பார்வையாளர்கள் அனைவரும் கண்டுமகிழ இன்னும் சில வருடங்களாவது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.�,