தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டத்தில் இதுவரை முடிக்கப்பட்ட பணிகள் குறித்த விவரங்களை வரும் ஏப்ரல் 4ஆம் தேதிக்குள் அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 13 டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இந்த நீரை ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி, சாத்தான்குளம் பகுதிக்குக் கால்வாய் அமைத்துக் கொண்டு வருவதற்காக, தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறுகளை இணைப்பது குறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைச் செயல்படுத்தும் வகையில், 2006ஆம் ஆண்டு தமிழக அரசு திட்டமிட்டது. 2011ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப்பிறகு இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றும், இத்திட்டத்தை விரைவுபடுத்தத் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமெனவும் கோரி திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு பொது நலவழக்கு தொடர்ந்தார்.
மனுதாரரின் இந்த கோரிக்கையைத் தமிழக அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி, தமிழக அரசுக்கு எதிராக அப்பாவு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.
இன்று (மார்ச் 21) இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநிலப் பொதுப்பணித் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 23,040 ஹெக்டேர் பரப்பு நிலங்கள் பாசன வசதி பெறும் இத்திட்டத்தை மூன்று கட்டங்களாகச் செயல்படுத்த நிதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 1,244 ஹெக்டேர் நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டி இருப்பதாகவும், 173 ஹெக்டேர் நிலம் தற்போது ஆர்ஜிதம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இத்திட்டம் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட பணிகள் என்ன, இனி மேற்கொள்ளவிருக்கும் பணிகள் என்ன என்பது குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர் நீதிபதிகள். இதையடுத்து, இந்த வழக்கு ஏப்ரல் 4ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
�,