அரசியலை விட்டு ராணுவம் விலகி நிற்பதாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் விளக்கம் அளித்துள்ளார்.
ராணுவப் படை, விமானப் படை, கடற்படை ஆகிய முப்படைகளை ஒருங்கிணைத்து புதிதாக முப்படைகளின் தளபதி பொறுப்பை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, ராணுவத் தளபதி பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்ற பிபின் ராவத்துக்கு, 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு, முப்படைகளின் தலைமை தளபதி பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் தேசிய போர் நினைவிடத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் இன்று (ஜனவரி 1) மரியாதை செலுத்தினார். அதன்பிறகு, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மூன்று படைகளை சேர்ந்த தளபதிகள் அவர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிபின் ராவத், “தரைப்படை, விமானப் படை, கடற்படை என அனைத்து குழுக்களும் இனி ஒன்றாக செயல்படும். தலைமை தளபதிக்கு வழங்கப்பட்ட பணியின்படி, முப்படைகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்தி சிறந்த நிர்வாகத்தை அளிப்பேன். நாங்கள் அரசியலில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறோம். அரசின் அறிவுறுத்தல்படிதான் செயல்படுவோம். முப்படைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த முயற்சி செய்வேன்” என்று தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், மாணவர்கள் என பல தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத், “குடியுரிமை திருத்தச்சட்ட விவகாரத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். இதனை செய்பவர்கள் சரியான தலைவர்கள் அல்ல” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
ராணுவத் தளபதி ஒருவர் அரசியல் கருத்து கூறுவது ராணுவ ஆட்சிக்கு வழிவகுப்பது போல உள்ளதாகத் தெரிவித்த எதிர்க்கட்சிகள், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தின. இந்த நிலையில் அரசியலிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம் என பதிலளித்துள்ளார் பிபின் ராவத்.�,