சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்வதில் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பதிவுத் துறை தெரிவித்துள்ளது.
பதிவுத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக அத்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த நேரத்தில் வரிசைக்கிரமமாக பாகுபாடற்ற சேவைகளை வெளிப்படையாக பொதுமக்களுக்கு வழங்குவது என்ற குறிக்கோளுடன் பதிவுத் துறை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தற்போதுவரை சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்வதில் எந்தவிதமான பாகுபாடுமின்றி முன்பதிவு செய்த வரிசையில் வரிசைக்கிரமமாக ஆவணப்பதிவு நடைபெற்று வருகிறது. அதேசமயத்தில் முன்பதிவு செய்து மூத்த குடிமக்களும் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. மூத்த குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இனிவரும் காலத்தில் எழுதிக்கொடுப்பவர் அல்லது எழுதி வாங்குபவரில் யாரேனும் ஒருவர் எழுபது வயதைக் கடந்தவராக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தங்களின் வரிசை எண்ணுக்காக காத்திருக்காமல் அலுவலகம் வந்தவுடன் உடனடியாக பதிவு செய்யும் வகையில் மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.
ஆதார் அடையாள அட்டை அல்லது உரிய அடையாள அட்டையின் உதவியுடன் வயது சரிபார்க்கப்படும். இனிவரும் காலத்தில் எழுபது வயது நிறைந்த மூத்த குடிமக்கள் பதிவு நாளன்று எந்த வரிசையில் டோக்கன் செய்திருந்தாலும் அவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த உடனேயே அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து உடனடியாக ஆவணம் பதிவு செய்யப்படும். இந்த அறிவிப்பு ஜனவரி 1ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,