fதுணை ராணுவம் தேவையில்லை: மனு தள்ளுபடி!

politics

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குத் துணை ராணுவம் தேவை இல்லை என்று காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும், துணை ராணுவத்தை அழைக்க வேண்டும் என்று அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் வேலூர் மற்றும் கோவையைச் சேர்ந்த ரகுபதி மற்றும் முருகேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த 10 நாட்களாக பல்வேறு விதிமீறல்கள் நடந்தன. இதனை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை.

ஆளுங்கட்சியினர் பரிசு கொடுப்பதைத் தடுக்காமல் தேர்தல் ஆணையமும் உடந்தையாகச் செயல்படுகிறது. எனவே துணை ராணுவ பாதுகாப்பை வழங்க உத்தரவிட வேண்டும். வாக்குப்பதிவு முதல் வாக்கு எண்ணிக்கை முடிவடையும் வரை அனைத்து நடைமுறைகளையும் சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

இந்த மனு, இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

டிஜிபி தரப்பில், போதுமான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் துணை ராணுவம் தேவையில்லை. சட்டம் , ஒழுங்கு பேணி காக்கப்படும். கோவையைப் பொறுத்தவரை அங்கு அதிவிரைவுப்படையினர் பணியில் ஈடுபடவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புதிய உத்தரவைப் பிறப்பிக்கத் தேவையில்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *