டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கிற்குத் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று(ஜூன் 27) உத்தரவிட்டது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் கோவை, சென்னை மாநகராட்சி பணிகளுக்காகக் கோரிய டெண்டரில் முறைகேடுகள் நடந்ததாக அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாரில் எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என்று தமிழக அரசு தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் வேலுமணிக்கு எதிரான வழக்கில் 10 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பான வழக்கு கடந்த ஜூன் 21ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை அறிக்கை நகலை வேலுமணி தரப்புக்கு வழங்குமாறு கூறிய உயர் நீதிமன்றம் வழக்கை ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும் வேலுமணி தரப்பில் புதிதாகக் கூடுதல் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று (ஜூன் 27) விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா, ‘இந்த மனு எப்படி விசாரணைக்கு உகந்தது’ என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு வேலுமணி தரப்பில், ‘தன் மீதான புகாரில் முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை முடித்து வைப்பது என முடிவு செய்த பின் வழக்குபதிந்தது தவறு என்று வாதிடப்பட்டது. மேலும் உச்ச நீதிமன்ற அனுமதியுடன் இந்த மனுவைத் தாக்கல் செய்திருப்பதாகவும், அரசு ஏற்கனவே எடுத்த முடிவை மாற்ற முடியாது என்றும் உள்நோக்கத்துடன் இந்த வழக்குப் பதியப்பட்டுள்ளதால் தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது .
இதை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்குப்பதிவு செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிடவில்லை. அதே சமயத்தில் வழக்கை ரத்து செய்யக் கோரவும் உரிமை இருக்கிறது. எனினும் ரிட் மனுவாகத் தாக்கல் செய்ய முடியாது என்று தெரிவித்து வேலுமணி மீதான வழக்கிற்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.
மேலும் வழக்கை ரத்து செய்யக் கோரிய வேலுமணியின் மனுவுக்குத் தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத் துறை அறப்போர் இயக்கம், திமுக ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
**-பிரியா**