மாட்டு பிரியாணி- பன்றி பிரியாணி: அரசியலை உலுக்கிய ஆம்பூர் பிரியாணி விழா

politics

தமிழகத்திலேயே முதல் முறையாக திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் ஆம்பூர் பிரியாணி திருவிழாவை மே 13, 14 ,15 நடத்துவதாக அறிவித்திருந்தது.

தற்போது இந்த பிரியாணி திருவிழா சர்ச்சைகளுக்கு உள்ளாகி ஒத்தி வைக்கப்பட்டு விட்டது.
இந்த பிரியாணி திருவிழாவை அறிவித்த மாவட்ட கலெக்டர் அமர் புஷ்வாஹா பிரியாணி திருவிழாவில் பீஃப் பிரியாணி இடம் பெறாது என்று தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனிதநேய மக்கள் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் ஆம்பூரில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் கிலோ மாட்டுக் கறி விற்பனையாகிறது. இந்த நிலையில் பிரியாணி திருவிழாவில் பீஃப் பிரியாணியையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதன்பிறகும் பீஃப் பிரியாணி பிரியாணி திருவிழாவில் இடம் பெறவில்லை என்று தெரிந்ததால் பிரியாணி திருவிழா அரங்க வாசலிலேயே பீஃப் பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தனர்.
இந்த நிலையில் நாளை மே 13ஆம் தேதி பிரியாணி திருவிழா தொடங்க இருந்த சூழலில் இன்று ஒட்டுமொத்த பிரியாணி திருவிழாவும் கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் கலை இலக்கிய பிரிவான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச் செயலாளர்
ஆதவன் தீட்சண்யா இன்று மே 12ஆம் தேதி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
“நாடு முழுவதுமுள்ள இறைச்சியுணவுப் பிரியர்களின் பேராதரவினைப் பெற்றுள்ளது ஆம்பூர் பிரியாணி. ஆம்பூர் பிரியாணி என்கிற பொதுப்பெயர் அங்கு தயாராகும் ஆட்டுக்கறி பிரியாணி, மாட்டுக்கறி பிரியாணி, கோழிக்கறி பிரியாணி ஆகிய மூன்றையும் சேர்த்தே குறிக்கிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 2022 மே 13,14,15 தேதிகளில் “ஆம்பூர் பிரியாணி திருவிழா” நடத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவுக்கான தயாரிப்புக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர், “பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி இடம்பெறாது” என்று கண்டனத்திற்குரிய கருத்தை தெரிவித்திருக்கிறார்.
ஆம்பூரில் அன்றாடம் 10ஆயிரம் கிலோ அளவுக்கு விற்பனையாகிறது மாட்டிறைச்சி. அந்தளவுக்கு அது அங்குள்ளவர்களில் பெரும்பான்மையினரால் விரும்பியுண்ணப்படுவதாக இருக்கிறது. ஆனாலும் ஆம்பூரில் நடக்கும் “பிரியாணி திருவிழா” என்கிற பொதுநிகழ்வில் அரசே ஒதுக்கிவைப்பதை ஏற்கமுடியாது என்று அக்கூட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் நிர்வாகத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த வந்த துணை ஆட்சியர், “மாட்டுக்கறி பிரியாணியும் இடம்பெற வேண்டும் என்று நீங்கள் வலியுறுத்தினால் சிலர் பன்றிக்கறி பிரியாணியும் இடம்பெற வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். அதை ஏற்காத சிலர் பிரச்னை செய்யக்கூடும்” என்று இவராக ஒரு பிரச்னையைக் கிளப்பியிருக்கிறார்.
உலகத்தில் எங்குமே ‘பன்றிக்கறி பிரியாணி’ என்ற வகையே இல்லாதபோது அவராக இப்படி மதக்கண்ணோட்டத்தில் ஒரு பிரச்னையைக் கிளப்பி மாட்டுக்கறி பிரியாணியை நிராகரித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.

தமிழர்களின் உணவுப்பழக்கத்தில் மாட்டிறைச்சி நெடுங்காலமாகவே இடம்பெற்றிருப்பதை பண்பாட்டு மானுடவியல் சார்ந்த ஆய்வுகள் பலவும் நிறுவியுள்ளன. ஆனால் இந்த வரலாற்றுண்மையை மறைத்து மாட்டை புனிதமாகவும் மாட்டிறைச்சி உண்பதை இழிவாகவும், பொதுவெளியில் புழங்கத்தகாததாகவும் இந்துத்துவவாதிகள் கட்டமைத்துவரும் அவதூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் பணிந்துவிட்டதோ என ஐயுற வேண்டியுள்ளது. தலித்துகள், இஸ்லாமியர் மட்டுமன்றி சாதி மதம் கடந்து பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் விரும்பியுண்கிற – அவர்களின் கொண்டாட்டத்திற்குரிய மாட்டுக்கறியின் மீதான ஒவ்வாமையும் புறக்கணிப்பும் இம்மக்களின் உணவுப்பண்பாட்டை அவமதிப்பாதாகிவிடும் என்பதை உணர்ந்து திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்.
மாட்டுக்கறி பிரியாணியும் இடம்பெறும் வகையில் “ஆம்பூர் பிரியாணி திருவிழா நடத்தப்படவேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆளுமைகள் மாட்டுக்கறி பிரியாணியை ஒதுக்கிவைத்துவிட்டு ஆம்பூரில் பிரியாணி திருவிழா நடக்கும் கலெக்டருக்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் கவிஞருமான சுகிர்தராணி மாட்டுக்கறி அல்லாத பிரியாணி விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தான் பெற்ற பரிசை மாவட்ட நிர்வாகத்திடம் திருப்பி அளித்துள்ளார்.

“கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி நடந்த திருப்பூர் மாவட்ட இலக்கிய திருவிழாவை துவக்கி வைக்க எழுத்தாளர் ஜெயமோகனை அழைத்திருந்தார்கள்.அப்போதே எதிர்ப்பு தெரிவித்தேன்

அமர்வுகள், பெண் எழுத்துகள் விளிம்பு நிலை எழுத்துகளை முன்னிலைப்படுத்தியதால், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் .அமர்குஷ்வாகா அவர்களின் முன்னெடுப்பைப் பாராட்டினோம்.

தற்போது, திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஆம்பூரில் பிரியாணி திருவிழா நடத்துவதாகவும் அதில் பீப் பிரியாணிக்கு அனுமதி இல்லை என்றும் அறிவித்திருக்கிறது. இலக்கிய வாசிப்பும் சமூகப் பார்வையும் உடைய மாவட்ட ஆட்சியர் இவ்வாறு அறிவித்திருப்பது வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் இந்த அறிவிப்புக்கு கண்டனத்தைத் தெரிவித்திருக்கின்றன. எழுத்தாளர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள் .

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி தவிர்க்கப்பட்டிருப்பது தீண்டாமையின் ஒரு வடிவம்தான்.எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக கடந்த மாதம் திருப்பத்தூர் புத்தகத் திருவிழாவில் அம்மாவட்ட ஆட்சியரிடம் பெற்ற நினைவுப் பரிசையும் போக்குவரத்திற்காக கொடுத்த ரூபாய் ஐந்தாயிரத்தையும் அம்மாவட்ட ஆட்சியருக்கே நான் திரும்ப அளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் கன மழையை காரணம் காட்டி பிரியாணி திருவிழாவை ஒத்திவைத்துள்ளது மாவட்ட நிர்வாகம். ஆனால் எதிர்ப்பாளர்களோ, கனமழை காரணமாக அல்ல கண்டன மழை காரணமாகத்தான் ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *