ள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ள நிலையில் உடனுக்குடன் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது திமுக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார். இந்தச் சூழலில் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ஜுனன், தாமோதரன், கந்தசாமி, அமுல் கந்தசாமி, ஜெயராமன், செல்வராஜ் ஆகியோருடன் நேற்று கோவை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சிறப்புப் பார்வையாளர் நாகராஜன் மற்றும் ஆட்சியர் சமீரன் ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தார் எஸ்.பி.வேலுமணி.
அதில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உள்ளாட்சித் தேர்தலில் பிரசாரத்தின்போதும் வாக்குப்பதிவு நாளன்றும் திமுகவினர் தேர்தல் நடத்தை விதிகளை மதிக்காமல் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்கினர்.
இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் போலீஸாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டனர்.
இதனிடையே எம்.எல்.ஏக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாகத்தான் கோவை மாவட்டத்துக்கு தேர்தல் சிறப்புப் பார்வையாளர் நியமிக்கப்பட்டார்.
இந்தச் சூழலில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் திமுகவுக்கு ஆதரவாக அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நீதிமன்ற உத்தரவுப்படி வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அனைத்தையும் வீடியோ பதிவு செய்து தேர்தல் ஆணையம் அதைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அதோடு வாக்கு எண்ணும் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். திமுகவினர் தங்களது வேட்பாளர்களைப் பணம் மற்றும் அதிகாரப் பலனை பயன்படுத்தி வெற்றி பெற வைக்க தயாராக உள்ளனர். எனவே தேர்தல் முடிவுகளை எவ்வித கால தாமதமும் இன்றி உடனுக்குடன் அறிவிப்பதுடன் வெற்றி சான்றிதழ்களையும் வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாளை உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதோடு இன்று சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள ஏழு வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று பதிவாகும் வாக்குகளும் நாளை எண்ணப்படவுள்ளன.
**-பிரியா**