தமிழகத்தில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை முதலே சென்னை உட்பட பல்வேறு பகுதிகளிலும் குறைந்த அளவிலேயே ஓட்டுகள் பதிவாகின.
அதன்படி இந்த தேர்தலில் வெறும் 60.70 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே வாக்குப்பதிவின் போது பிரச்சினை ஏற்பட்ட இடங்களில் என்ன நடந்தது என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டது.
அதன் அடிப்படையில் சென்னையில் இரண்டு வார்டுகள் உட்பட தமிழகத்தின் ஐந்து வார்டுகளில் உள்ள ஏழு வாக்குச்சாவடிகளுக்கு நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னையில் வண்ணாரப்பேட்டை வார்டு எண் 51, வாக்குச்சாவடி எண் 1174 av மற்றும் ஓடைகுப்பம் வார்டு எண் 179, வாக்குச்சாவடி எண் 5059 avஆகியவற்றில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மதுரை திருமங்கலம் நகராட்சி வார்டு எண் 17, வாக்குச்சாவடி எண் 17w , அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி வார்டு எண் 16, வாக்குச்சாவடி எண் 15 m, 15w, திருவண்ணாமலை நகராட்சி வார்டு எண் 25, வாக்குச்சாவடி எண் 57m, 57w, ஆகியவற்றில் வரும் 21ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். கடைசி ஒரு மணி நேரம், மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா மற்றும் அறிகுறி உள்ளவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியா மை வைக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
**-பிரியா**