நர்சிங் படிப்புக்கும் நீட்: எதிர்க்கும் தமிழகம்!

politics

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கே நீட் தேர்வு நடத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு முதல் பி.எஸ்சி நர்சிங், பி.எஸ்சி லைஃப் சையின்ஸ் படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு முடிவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதற்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “ “படித்து முடித்ததும் வேலைவாய்ப்பைப் பெற்று குடும்பத்தை பார்த்துக் கொள்ள நினைக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண் பிள்ளைகளுக்குச் செவிலியர் படிப்பு என்பது மிகப்பெரிய வாய்ப்பு. இந்த படிப்புக்கும் நீட் கட்டாயம் என்பது மத்திய அரசின் ஆணவத்தை காட்டுகிறது.

எம்.பி.பி.எஸ் படிக்க நீட் கட்டாயம் என்று 14 உயிர்கள் போக காரணமானவர்கள், அந்தக் குற்ற உணர்ச்சி ஏதுமின்றி செவிலியர் படிப்புக்கும் நீட் அவசியம் என்று சொல்வதை ஏற்க முடியாது. இது மாணவ – மாணவியரை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். இந்த அறிவிப்பை உடனே திரும்பப்பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

**மாணவர்களின் எதிர்காலம் விற்பனைக்கல்ல**

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “நர்சிங், லைஃப் சயின்ஸ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு என்று ஆணி அறைகிறது மத்திய அரசு. அதற்கும் தலையாட்டும் மாநில அரசு. எல்லாவற்றையும் விற்பவர்கள், தொடர்ந்து கல்வியையும் கடை விரிக்கிறீர்களே… அரசுகளே, எங்கள் மாணவர்களின் எதிர்காலம் விற்பனைக்கல்ல” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, “ நீட் தேர்வு மூலம் பலநூறு ஏழை மாணவர்களின் எதிர்கால டாக்டர் கனவுகளைச் சிதைக்கும் மத்திய அரசு, தற்போது பி.எஸ்.சி. நர்சிங்., பி.எஸ்.சி. லைஃப் சயின்ஸ் ஆகிய செவிலியர் பணிகளுக்கான படிப்புகளுக்கும் இந்த 2021-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருப்பது நயவஞ்சகத்தின் உச்ச கட்டமாகும்.

உயிர் காக்கும் மருத்துவச் சேவைகளில் முன்களப் பணியாளர்களில் முதன்மையானவர்கள் செவிலியர்தான். நாட்டில் உள்ள செவிலியர்களில் பெரும்பான்மையோர், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மைச் சமுதாயங்களைச் சார்ந்தோர் என்பதையும், நர்சிங் கல்வி பயில்வதிலும் பெரும்பான்மையோர் இந்தச் சமுதாயங்களைச் சேர்ந்த அடித்தட்டு மக்களின் வாரிசுகள் என்பதையும் நன்கறிந்த பாஜக அரசு, இந்த விஷம் கக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அத்துடன் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருத்துவப் படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு என்ற அறிவிப்பும், உயர் சாதியினர் என்று சொல்லப்படும் சொற்ப அளவில் உள்ள இனத்தினர் மற்றும் பெரும் செல்வந்தர்களின் குழந்தைகள் மட்டுமே இனி மருத்துவர்களாக முடியும் என்பதை மறைமுகமாகத் தெரிவிப்பது போன்று உள்ளது.

எனவே, நர்சிங் உட்பட பி.எஸ்.சி. போன்ற இளங்கலைப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு என்ற அறிவிப்பை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *