சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று (நவம்பர் 12) அதிமுக பொதுச் செயலாளர் என்று க்ளைம் செய்துகொள்ளும் சசிகலா பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
இன்று காலை தி.நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்ட சசிகலா முதலில் கிரியப்பா சாலைக்கு சென்றார். அங்கே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி அவர்களிடம் சேதம் பற்றி கேட்டறிந்தார். பின்னர் அவர் கோட்டூர்புரம் விநாயகர் கோயில் அருகே சென்றார். அங்கே சித்ரா நகரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். அவர்களுக்கும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
ஜெயலலிதா பாணியில் வேனில் வந்த சசிகலா ஆங்காங்கே இறங்கி மக்களை சந்தித்தார். வேனில் அமர்ந்தபடியே பேசிய சசிகலா, “வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. மக்களை காப்பாற்றத்தான் அரசுகள் இருக்கின்றன, மத்திய அரசும் மாநில அரசும் விரைவாக செயல்பட வேண்டும். மத்திய அரசு தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய நிதியை விரைவாக கொடுக்க வேண்டும், தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு சாலையிலும் எப்படி நீர் தேங்கி நிற்கிறது என்பதை நேரில் சென்று பார்த்து வருகிறார்கள். மீண்டும் இதுபோன்ற நிலைமை ஏற்படாத வண்ணம் செயலாற்ற வேண்டும். தமிழகத்துக்கு உரிய நிவாரணத் தொகையை மத்திய அரசு விரைவாக அளிக்க வேண்டும்” என்று கூறினார் சசிகலா. வடசென்னை பகுதிக்கும் சசிகலா சென்று பார்வையிடுகிறார்.
சசிகலாவின் வெள்ள சேத பார்வையிடுதல் பயணம் பற்றி நேற்றே தகவல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் சேலத்தில் இருந்த அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக சென்னை வந்து இன்று தாம்பரத்தில் தொடங்கி செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை சேதத்தைப் பார்வையிட்டார்.
சசிகலா தி.நகரில் மழை சேதத்தைப் பார்வையிட்ட அதேநேரம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சைதாப்பேட்டையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
**-வேந்தன்**
�,”