நடிகர் பார்த்திபனின் இரவின் நிழல்’திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப் போயுள்ளது.
தமிழ் சினிமாவில் எப்போதும் தன் படங்களில் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்பவர் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன். அந்த வகையில் ‘கதை திரைக்கதை வசனம்’ மற்றும் ‘ஒத்த செருப்பு’ ஆகிய படங்களுக்குப் பிறகு இவருடைய திரைப்படமான ‘இரவின் நிழல்’ ஜூன் 24ஆம் தேதி அதாவது நேற்று திரையரங்குகளில் நேரடியாக வெளியாக இருந்தது.
இந்த திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் நான் லீனியர் திரைப்படமாகும். இந்த படத்தை நடிகர் பார்த்திபனே இயக்கி திரைக்கதை வசனம் எழுதி நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடல் வெளியீடு, இசை வெளியீட்டு விழா என இந்த படம் தொடர்பான ஒவ்வொரு புரமோஷன் நிகழ்ச்சிகளையும் வித்தியாசமான முறையில் முன்னெடுத்து வந்தார் நடிகர் பார்த்திபன்.
ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் நான் லீனியர் திரைப்படம் என்பதால் ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்று அங்கீகாரம் பெற்றது. மேலும் கடந்த மாதம் கான் திரைப்பட விழாவிலும் இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று வெளியாக இருந்த திரைப்படம் சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என நடிகர் பார்த்திபன் தற்பொழுது புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால் இன்னும் தேதி குறிப்பிடப்படவில்லை .
**ஆதிரா**