நடிகர் விஜய்யின் 66வது படத்தில் நடிப்பது பற்றியும் படப்பிடிப்பில் நடந்தது பற்றியும் ராஷ்மிகா பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஜய்யின் தலைப்பிடப்படாத 66வது படத்திற்கான படப்பிடிப்பின் இரண்டாம் கட்டம் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. தமிழில் ‘தோழா’ படம் இயக்கிய வம்சி இந்த படத்தை இயக்க தில் ராஜூ இதனை தயாரிக்கிறார். ‘மாஸ்டர்’ படத்தில் இருந்து இசையமைக்கும் வாய்ப்பு தள்ளி போய் கொண்டே இருந்து இறுதியில் இந்த படத்தில் தமன் ஒப்பந்தமாகி இருக்கிறார். ராஷ்மிகா மந்தானா கதாநாயகியாக நடிக்கிறார்.
சமீபத்தில் இதன் பூஜை நடைபெற்று, முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் பாடல் காட்சியோடு தொடங்கி முடிவடைந்து இருக்கிறது. தமிழ்- தெலுங்கு என பைலிங்குவலாக உருவாகி வரும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், நேற்று படப்பிடிப்பு அனுபவம் பற்றி ராஷ்மிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டைரி குறிப்பாக தொடங்கும் அதில், ‘அதிகாலையில் எழுந்து கிட்டத்தட்ட 25 நாட்களுக்கு பிறகு என்னுடைய கார்டியோவை செய்ய கிளம்பினேன். பின்பு படப்பிடிப்பு தளத்திற்கு கிளம்பினேன். என்னுடைய மேக்கப், சிகையலங்காரம் ஆகியவற்றை முடித்து கொண்டு வந்து விஜய் சார், வம்சி சார், யோகிபாபு சார் மற்றும் மொத்த டீமையும் சந்தித்தேன்.
அவர்களுடன் அதிக நேரம் செலவிட்டதில் மகிழ்ச்சி. படப்பிடிப்பு மிகவும் நன்றாக நடந்தது. பின்பு நான்கைந்து மணி அளவில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நாற்காலி ஒன்றில் படுத்து நன்றாக உறங்கி இருக்கிறேன்.
நான் எங்கு படுத்தாலும் உறங்கி விடுகிறேன் என நண்பர்கள் கேலி செய்தார்கள். ஆனால், நான் இதை கேலியாக பார்க்கவில்லை. இதை எனக்கு கிடைத்த வரமாகவே பார்க்கிறேன். பின்பு படப்பிடிப்பு தளத்தில் இருந்து சிறிது நாட்கள் கழித்து ஜிம்மிற்கு சென்று விட்டு உறங்க போய் விட்டேன்’ என ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.
**ஆதிரா**