காதலருக்காக அணுகுமுறையை மாற்றிக்கொண்ட நயன்தாரா?

entertainment

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. இந்தப் படத்துக்காக எந்தவிதமான பத்திரிகையாளர் சந்திப்பு, இசை வெளியீடு உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளையும் தயாரிப்பு நிறுவனமான ரெளடி பிக்சர்ஸ் மற்றும் 7ஸ்கீரின்ஸ் ஸ்டுடியோ இரண்டு நிறுவனங்களும் நடத்தவில்லை.


சில வலைதளங்களுக்கு மட்டும் விளம்பரக் கட்டணம் செலுத்தி விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி பேட்டிகளை ஒலிபரப்ப செய்தனர். இயக்குநராக விக்னேஷ் சிவன் இதுவரை தமிழ் சினிமாவில் வெற்றி பெறவில்லை. இயக்குநர் என்பதை காட்டிலும் நடிகை நயன்தாரா காதலராக பொதுவெளியில் பிரபலமானவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கிய போடா போடி (2012), நானும் ரௌடிதான் (2015), தானா சேர்ந்த கூட்டம் (2018) மூன்று படங்களில் நானும் ரௌடிதான் மட்டும் சுமாரான வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது நயன்தாரா – விக்னேஷ் சிவன் இடையே காதல் ஏற்பட்டது.

நயன்தாராவின் சிபாரிசில் 2018இல் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் மோசமான தோல்வியைச் சந்தித்த படங்களில் இதுவும் ஒன்றாக ஆனது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க நடிகர்களும், தயாரிக்க தயாரிப்பாளர்களும் விரும்பவில்லை. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தை தயாரிப்பதற்காகவே நயன்தாராவால் தொடங்கப்பட்டது ‘ரௌடி பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனம்.


நட்புரீதியாக நயன்தாராவுக்கு கால்ஷீட் கொடுத்தார் விஜய்சேதுபதி. அவ்வாறு தொடங்கப்பட்டதுதான் “காத்து வாக்குல ரெண்டு காதல்”. இந்தப் படம் வெளியாகும் முன்பே அஜீத் குமார் நடிக்கும் படத்துக்கு லைகா நிறுவனம் மூலம் விக்னேஷ் சிவனை இயக்குநராக உறுதிப்படுத்திவிட்டார் நயன்தாரா. இந்த நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் நயன்தாராவுக்கு உள்ளது. படம் மோசமான தோல்வியை தழுவினால் அஜீத் குமார் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவன் கை நழுவிப் போகலாம் என்பதால் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை தமிழகத்தில் வெளியிடும் பொறுப்பை ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் ஒப்படைத்தார் நயன்தாரா. படம் வெளியான பின்பு எதிர்மறையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.


ஆணாதிக்க மனப்பான்மையுடன் பெண் அடிமைத்தனத்தை முன் நிறுத்தும் படம் என கூறப்பட்டது. இதனால் படத்துக்குப் பின்னடைவு ஏற்படக்கூடாது என்பதற்காக நயன்தாரா நேரடியாக படத்துக்கான விளம்பர வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு படத்தில் நடிப்பதற்கு 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நயன்தாரா, அந்தப் படம் சம்பந்தமான விளம்பர நிகழ்வுகளுக்கு வர மாட்டார். இந்த நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துக்கு தயாரிப்பாளர், கதாநாயகி காதலர் தான் இயக்குநர் என்பதால் படத்தை விளம்பரப்படுத்தத் தரையில் கால்பதித்து நடக்கத் தொடங்கியுள்ளார் நயன்தாரா.
காதலர் – இயக்குநர் விக்னேஷ் சிவனை அழைத்துக்கொண்டு படம் வெளியாகியுள்ள திரையரங்குகளுக்குச் செல்ல தொடங்கியுள்ளார் நயன்தாரா. தனக்கு வந்தால் காரச் சட்னி மற்றவர்களுக்கு என்றால் அது தக்காளிச் சட்னி என்பது போன்று தயாரிப்பாளர்களிடம் அணுகுமுறையை மேற்கொண்ட நயன்தாரா தனக்கு என்று வந்த பின்னால் தரையில் கால் பதித்திருக்கிறார் என்கின்றனர் தமிழ்த் திரைப்பட வட்டாரத்தில்.
**-இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *