தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் 2019 ஜூன் 23 அன்று நடைபெற்றது. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் வாக்கு எண்ணிக்கைக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது 32 மாதங்கள் கடந்து வரும், 20ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
இதுகுறித்து நடிகர் சங்க தேர்தல் அலுவலர் பத்மநாபன் வெளியிட்ட அறிவிப்பில், “தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், 2019 ஜூன் 23ல் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை வரும், 20ம் தேதி காலை 8:00 மணிக்கு, கல்லூரி சாலையில் உள்ள குட் செப்பர்ட் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெறும். தேர்தல் முடிவு, அடுத்து வரும் நாளில் முடிவு செய்து அறிவிக்கப்படும்.
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் மட்டுமே ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணிக்கை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இந்த வாரத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க வரலாற்றில் தேர்தல் நடந்து வாக்கு எண்ணிக்கை இவ்வளவு காலம் நீதிமன்றத்தால் முடக்கிவைக்கப்பட்டிருப்பது இதற்கு முன் எப்போதும் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது
**-பிரியா**