நடிகை பாவனா கடத்தல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 84 நாள் சிறைவாசத்திற்கு பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன் பின் கடந்த ஐந்து வருடங்களாக வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இன்றி கிடப்பில் போடப்பட்டது.
தற்போது நீதிமன்ற உத்தரவின்பேரில் வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தீலீப் நண்பரும், இயக்குநருமான பாலசந்திரனை காவல்துறை விசாரித்தபோது அவர் கொடுத்த வாக்குமூலம் திரையுலகை மட்டுமல்ல, காவல்துறையையும் அதிரவைத்தது. கடத்தல் வழக்குவிசாரணை அதிகாரி கையை வெட்டுவேன் என தீலீப் கூறியதாக பாலசந்திரன் காவல்துறை விசாரணையில் கூறியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் கடத்தல் வழக்கை விசாரித்த டிஎஸ்பி பைஜு புவலோசை கொலை செய்ய திலீப் முயற்சித்ததாக திலீப் மற்றும் அவரது உறவினர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருக்க திலீப் கேரள உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது திலீபின் வழக்கறிஞர் கொரோனா காலம் என்பதால் இந்த வழக்கில் திலீபை கைது செய்யக்கூடாது. வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றார். வழக்கு விசாரணையை வருகிற 14ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிமன்றம் அதுவரை திலீபை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டதோடு, முன்ஜாமீன் குறித்த போலீசின் நிலைப்பாட்டை தெரிவிக்கவும் உத்தரவிட்டது.
**-இராமானுஜம்**
�,