�
உத்தரப் பிரதேசத்தில் காப்பி அடிக்க முடியாத காரணத்தால் கடந்த நான்கு நாட்களில் பத்து லட்சம் மாணவர்கள் தேர்வைப் புறகணித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 6ஆம் தேதி 10 மற்றும் 12வது வகுப்பு தேர்வுகள் தொடங்கின. இதில் சுமார் 66 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 22 ஆம் தேதியும், 12ஆ ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 12 ஆம் தேதியும் முடிவடைய உள்ளன. இங்கு, பொதுத் தேர்வில் காப்பி அடிக்கும் பழக்கம் இருந்துவருகிறது.ஏற்கனவே,இது குறித்த செய்திகள் வெளியாகின. கட்டுப்பாடுகளும் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டதால், காப்பி அடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், தேர்வு தொடங்கிய முதல் நாளிலேயே ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வைப் புறக்கணித்தனர்.
முதல் நாளில் நடந்த கெடுபிடிகளைப் பார்த்து இரண்டாம் நாளில் ஐந்து லட்சம் மாணவர்கள் தேர்வைப் புறக்கணித்தனர். இதுவரை நான்கு தேர்வுகள் முடிந்துள்ளன. ஆனால், பத்து லட்சம் பேர் தேர்வைப் புறக்கணித்துள்ளனர்.
மாநிலப் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் நீனா ஸ்ரீவாத்ஸசவா, ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடத்தில் தேர்வு பயம் காரணமாக மாணவர்கள் தேர்வைப் புறக்கணித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
இதற்கு முன் 2016ஆம் ஆண்டு 6.4 லட்சம் மாணவர்கள் தேர்வை புறகணித்தது அதிகபட்சமாக இருந்தது. அதையும் முறியடித்து இந்த முறை பத்து லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. ஒரே நேரத்தில் மிக அதிக அளவிலான மாணவர்கள் தேர்வைத் தவிர்த்திருப்பது இதுவே முதல் முறையாகும்.�,