Oகோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீசல் பற்றாக்குறைக் காரணமாக ஒரே அமரர் ஊர்தியில் மூன்று முதல் நான்கு உடல்களைக் கொண்டுசெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அமரர் ஊர்தி வாகனங்களில் ஒரே ஒரு அமரர் ஊர்தி மட்டுமே கடந்த இரண்டு நாள்களாக இயக்கப்பட்டு வந்துள்ளது. இந்த அமரர் ஊர்தி சேவை செஞ்சிலுவை அமைப்பால் பராமரிக்கப்பட்டு வந்தாலும், இதற்குத் தமிழக அரசுதான் நிதி ஒதுக்கி வருகிறது. இந்த வாரத்தில், வாகனங்களுக்கு டீசல் போடுவதற்கான தொகை ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அனைத்து அமரர் ஊர்திகளும் ஓரம்கட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அரசு மருத்துவமனை மருத்துவர் அசோகன் கூறுகையில், “இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளோம். விரைவில் அமரர் ஊர்தி சேவை சரி செய்யப்படும். சிறு நிர்வாக பிரச்னையால் டீசல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
ஒரே ஒரு அமரர் ஊர்தி மட்டும் இயக்கப்படுவதால், அதில் மூன்று முதல் நான்கு உடல்களைக் கொண்டுசெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது மட்டுமில்லாமல், இதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தனியார் வாகனங்களுக்கு ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை வாடகை கேட்கின்றனர். அவ்வளவு தொகை கொடுத்து எங்களால் அவற்றைப் பயன்படுத்த முடியாது என மக்கள் கவலையுடன் தெரிவித்தனர். இந்த நிலைமை தமிழகம் முழுவதும் நிலவுவதாகக் கூறப்படுகிறது.�,