பலாப்பழ சீசன் காரணமாக மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலைகளிலும் பந்தலூர் தாலுகாவில் கொளப்பள்ளி அருகே உள்ள வீடுகளைச் சுற்றியும் வலம்வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் பீதி அடைந்து வருகின்றனர்.
கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை, தட்டப்பள்ளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன. இதனால் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (மே 2) இரவு 10 மணியளவில் காட்டு யானை ஒன்று கோத்தகிரி – மேட்டுப்பாளையம் சாலையின் நடுவே நடந்து சென்றது. இதை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் கண்டு பீதி அடைந்தனர்.
தொடர்ந்து சற்று தொலைவிலேயே தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு காத்திருந்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிது நேரம் சாலையில் உலா வந்த காட்டு யானை, அதன் பிறகு வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.
இதேபோன்று பந்தலூர் தாலுகாவில் உள்ள கொளப்பள்ளி அருகே அம்மன்காவு பகுதியில் நேற்று (மே 3) மாலை 5.30 மணியளவில் 7 காட்டு யானைகள் புகுந்தன. மேலும் பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
இதுகுறித்து பிதிர்காடு வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை விரட்டியடித்தனர்.
மேலும், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்லும்படி கேட்டுக்கொண்டனர்.
**-ராஜ்**
.�,