அடுத்த 3 ஆண்டுகளுக்குள் எல்லா மின்சார மீட்டர்களும், பிரீபெய்டு மீட்டர்களாக மாற்றப்படும் என்று ஒன்றிய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியுள்ளார்.
மின்சார மீட்டர்கள் உற்பத்தியாளர்கள் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் பேசுகையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து மின்சார மீட்டர்களையும் ஸ்மார்ட் பிரீபெய்டு மீட்டர்களாக மாற்றுவோம். பில்கள் நேரடியாக வீடுகளுக்கு வந்துசேரும். இதனால் பிரீபெய்டு மீட்டர்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியிருக்கும். பிரீபெய்டு மீட்டர்களைக் கட்டாயமாக்கும் அரசு அறிவிப்பும் குறிப்பிட்ட ஒரு நாளில் வெளியாகும்” என்றார்.
இந்தக் கூட்டத்தில் பிரீபெய்டு மீட்டர்கள் உற்பத்தி குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. மொத்த தொழில்நுட்ப மற்றும் வர்த்தகத் துறையில் இழப்பைக் குறைக்க மின்சாரத் துறையில் புரட்சிகரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இந்தத் திட்டம் குறித்து அரசு கூறி வருகிறது. ஆற்றல் பாதுகாப்பு, ஊக்குவிப்பு மற்றும் கட்டண முறையை எளிமையாக்குதல் போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு புதிய பிரீபெய்டு மின்சார மீட்டர்கள் அமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மின்சாரத் துறை செயலாளர் ஏ.கே.பல்லா, கூடுதல் செயலாளர் சஞ்சீவ் நந்தன் சஹாய் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.�,”