2
2017ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் சுமார் 87,000 வேலைவாய்ப்புகள் பறிபோகியுள்ளதாக தொழிலாளர் பணியக அறிக்கை கூறுகிறது.
மத்திய தொழிலாளர் பணியகத்தின் காலாண்டு வேலைவாய்ப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 2017ஆம் ஆண்டின் ஏப்ரல் – ஜூன் மாதத்தில் மொத்தம் 87,000 பணி இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 12,000 வேலைகள் மட்டுமே பறிபோகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி, சுகாதாரம், கட்டுமானம், வர்த்தகம், விடுதி மற்றும் உணவகம், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் போக்குவரத்து ஆகிய எட்டு துறைகளை மையமாகக் கொண்ட இந்த ஆய்வில், மேற்கூறிய ஏப்ரல் – ஜூன் காலாண்டில் முந்தைய காலாண்டை விட 64,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர் பணியக அறிக்கை கூறுகிறது. இந்த எண்ணிக்கையானது முந்தைய மூன்று காலாண்டு அளவை விட மிகவும் குறைவாகும்.
ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரையில், ஏப்ரல் – ஜூனில் 64,000 வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. குறிப்பாக உற்பத்தித் துறையில் சுமார் 54,000 பேர் தங்களது பணியை இழந்துள்ளனர். புதிதாக வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரையில், சுமார் 1.48 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில் 3,000 பேரும், கட்டுமானத் துறையில் 10,000 பேரும் தங்களது பணியை இழந்துள்ளனர். கல்வித் துறையில் புதிதாக 2,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.�,