5,000 ஆண்டுகள் பழமையான அமர்நாத் கோயில் இந்துக்களின் புனிதத் தலமாக கருதப்படுகிறது. கடல்மட்டத்திலிருந்து சுமார் 14,000 அடி உயர மலையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. அமர்நாத் கோயிலில் இயற்கையாகத் தோன்றும் பனி லிங்கத்தைத் தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். 300 கி.மீ. தூர யாத்திரைக்கு 2.30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ள னர். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை நேற்று முன்தினம் (ஜூன், 28) தொடங்கியது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக வழக்கத்தை விடக் கூடுதலாக 14 ஆயிரம் ராணுவ வீரர்களும், பதட்டமான பகுதிகளில் 2 ஆயிரம் வீரர்களும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்முவில் இருந்து பஹல்காம் மற்றும் பல்தால் அடிவார முகாம்களை அடைந்த யாத்ரீகர்கள் நேற்று (ஜூன்,29) காலை அங்கிருந்து குகைக் கோயிலை நோக்கி பயணத்தை தொடங்கினர். முதல் நாள் குழுவில் ஜம்மு – காஷ்மீர் ஆளுநர் என்.என்.வோஹ்ரா கலந்து கொண்டு பனி லிங்கத்தைத் தரிசித்து சிறப்பு பூஜைகள் நடத்தினார். 1,811 ஆண்கள், 422 பெண்கள், 47 சாதுக்கள் என 2,270 யாத்ரீகர்களை கொண்ட முதல் குழு பனி லிங்கத்தைத் தரிசனம் செய்தது. 2,481 யாத்ரீகர்களைக் கொண்ட 2-வது குழு நேற்று (ஜூன்,29) 66 வாகனங்களில் ஜம்முவில் இருந்து அடிவார முகாம்களை நோக்கிப் புறப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக அமர்நாத் புனித யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கனமழை காரணமாக உதம்பூர் பஹல்காம் மற்றும் பால்ட்டால் வழிப்பாதையில் பாறைகள் சரிந்துள்ளன. தற்போது, பாறைகளை அகற்றும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, அமர்நாத் யாத்திரை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு 48 நாட்கள் நடந்த அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு 40 நாட்களாக குறைக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.�,