சர்வதேசப் படகுப்போட்டியில் கலந்துகொண்டபோது விபத்தில் சிக்கிக்கொண்ட இந்தியக் கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி, இன்று (செப்டம்பர் 24) ஆஸ்திரேலியாவில் பத்திரமாக மீட்கப்பட்டார்.
கோல்டன் குளோப் என்ற பெயரில் நடந்துவரும் சர்வதேசப் படகுப் போட்டியில், இந்திய கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி கலந்துகொண்டார். கடந்த வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 21) தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியைக் கடந்தபோது அபிலாஷின் படகு விபத்திற்குள்ளானது. ராட்சத அலையில் சிக்கியதால், அவரது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்த நகரமுடியாத அளவுக்கு, கடுமையான பாதிப்பினை அவர் எதிர்கொண்டார். இதனையடுத்து, அவர் போட்டி ஏற்பாட்டாளர்களுக்குத் தகவல் அனுப்பினார். அபிலாஷ் டோமி கடலில் சிக்கியது குறித்து, இந்திய கடற்படைக்கும் தகவல் சொல்லப்பட்டது.
இதன் பேரில், அவரைக் காப்பாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மொரிஷியஸில் இருந்து புறப்பட்ட இந்தியக் கடற்படை விமானமொன்று, அவரைக் காப்பாற்ற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியது. ஆனால், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து 1,900 நாட்டிகல் மைல் தொலைவில் அபிலாஷின் படகு இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலையில் அபிலாஷ் பத்திரமாக மீட்கப்பட்டார். அவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓசிரிஸ் எனும் மீன்பிடிக் கப்பலில் ஏற்றப்பட்டதாக, இந்தியக் கடற்படை சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. கடலில் காற்று அதிகமாக இருப்பதாலும், தகவல் தொடர்பு சாதனங்கள் சரியாக வேலை செய்யாததாலும், அபிலாஷைத் தொடர்புகொள்ள இந்தியக் கடற்படையால் இயலவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அவர் மீட்கப்பட்டதை சமூக வலைதளங்களில் கடற்படை உறுதி செய்துள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டு கடற்படைக்குச் சொந்தமான கப்பலுக்கு விரைவில் அபிலாஷ் மாற்றப்படுவார் என்றும், அதன்பின்னர் அவர் ஐஎன்எஸ் சத்புரா மூலமாக மொரிஷியஸுக்கு மருத்துவச் சிகிச்சைக்காக அழைத்துவரப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.�,