இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளன. குறிப்பாக எரிபொருள் தட்டுப்பாடு இலங்கையை கடுமையாக பாதித்து வருகிறது. மேலும் எரிபொருள் இறக்குமதி செய்ய இந்தியாவிடமிருந்து தொடர்ந்து கடனுதவி வாங்கி வருகிறது இலங்கை அரசு. இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாகிக் கொண்டிருக்கும் நிலையில், வரும் நாட்களில் எரிபொருள் தேவையில் 50 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் நிலையில் இலங்கை உள்ளது என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார்.
தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி, மக்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதித்து வருகிறது என்பது குறித்து ஐ.நா. ஆய்வு நடத்தியது. அதில் இலங்கையில் விலைவாசி உயர்வு மற்றும் மக்களின் வாங்கும் திறன் குறைந்ததால் 80 சதவீதத்துக்கு அதிகமான குடும்பங்களுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வருங்காலத்தில் இலங்கை மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த கடும் உணவு தட்டுப்பாட்டுக்கு, கடந்த இரண்டு வருடங்களில் விளைச்சல் குறைவு, அரிசி இறக்குமதியில் விலை 20 சதவீதம் உயர்வு ஆகியவை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறுகையில், “தற்போது இலங்கையிடம் 7 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் மட்டுமே கையிருப்பில் உள்ளது. மேலும் உணவு தட்டுப்பாடு அதிகரித்து கொண்டே வருவதால் இலங்கை மக்களுக்கு ஊட்டச்சத்து குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது எரிபொருளுக்காக இந்தியாவிடமிருந்து வரும் கடன் உதவியால் 50 சதவீத எரிபொருள் தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.” என்று தெரிவித்தார்.