உலகின் மிக உயரமான மலையின் தாயகமான நேபாளத்தில் அடிக்கடி வானிலை காரணமாக விமானம் இயக்குவது சற்று கடினமாக இருக்கும். இந்நிலையில், நேபாளத்தின் பொக்காராவிலிருந்து கிளம்பிய தாரா ஏர் விமானம் 22 பயணிகளுடன் மாயமானது. இதில் 4 இந்தியர்களும், 2 ஜெர்மானியர்கள் மற்றும் 13 நேபாள பயணிகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் இன்று காலை 9.55 மணியளவில் கிளம்பி 15 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது.
இந்த விமானம் மேற்கு மலைப் பகுதியில் உள்ள ஜோம்சோம் விமான நிலையத்தில் காலை 10:15 மணிக்கு தரையிறங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் தொடர்பை இழந்த விமானத்திற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.
இந்நிலையில் நேபாள அரசாங்கம் முஸ்டாங் மற்றும் பொக்காராவிலிருந்து இரண்டு தனியார் ஹெலிகாப்டர்களை மீட்புப்பணிக்கு அனுப்பியுள்ளது. நேபாள ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தரைவழி வழியாக தேடுதல் பணியை மேற்கொள்ள அனுப்பப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
போக்ரா-ஜோம்சம் விமானப் பாதையில் கோரேபானிக்கு மேலே செல்லும் போது விமானம் தொடர்பை இழந்த நிலையில் ஜோம்சோமில் உள்ள காசாவில் ஒரு பெரிய சத்தம் கேட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டில், தாரா ஏர் மூலம் இயக்கப்படும் ட்வின் ஓட்டர் டர்போபிராப் விமானம் மியாக்டியின் மேற்கு மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது. அதில் மூன்று பணியாளர்களைத் தவிர, ஒரு சீனர் மற்றும் ஒரு குவைத் நாட்டவர் உட்பட 23 பயணிகள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.