கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தலையில் தீ வைத்து பொங்கல் வைக்கும் வினோத திருவிழா தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் அங்காளம்மன் கோயில் ஒன்று உள்ளது. இங்கு மாசித்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த திருவிழா களையிழந்து காணப்பட்டது. இந்த நிலையில், இந்தாண்டு பழையபடி மாசித் திருவிழா கோலாகலமாக நடத்தப்பட்டது . இந்த திருவிழாவின் ஐந்தாவது நாளில் சாமி வீதியுலா வருவதுண்டு. அந்த சமயத்தில் பக்தரின் தலையில் தீ வைத்து பொங்கல் வைப்பது வழக்கம்.
அதன்படி, திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று பம்பை இசைக்கு ஏற்ப ஆண், பெண் பக்தர்கள் அருள் வந்து ஆடினர். அப்போது, பொதுமக்கள் முன்னிலையில் வயதான பக்தர் ஒருவர் தலையில் சும்மாடு வடிவில் துணியைச் சுற்றி, அதன் மேலே மண்ணெண்ணையை ஊற்றி, தீ வைத்து, பின் ஒரு பாத்திரத்தை அதன்மீது வைத்து பொங்கல் செய்தனர். அந்த பொங்கலை சாமி ஊர்வலம் வரும் போது சாமிக்கு படைத்தனர்.
பின்பு, அந்த பொங்கல் குழந்தை இல்லாதவர்களுக்கும், உடல்நிலை சரியில்லாதவர்களுக்கும் வழங்கப்பட்டது. இதை சாப்பிட்டால் உடல்நலக்குறைவு மற்றும் குறைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
**-வினிதா**