பசுக்களை பாதுகாப்பதுபோல் விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் என்று, சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார்.
பசுக்களைக் கொல்வதற்கு கடுமையான தண்டனை விதித்து உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் குஜராத் போன்ற மாநில அரசுகள் சட்டம் இயற்றி வருகின்றன. குறிப்பாக, சத்தீஸ்கரில் பசுக்களை கொல்வோருக்கு தூக்குத் தண்டனையும், குஜராத்தில் ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுவதாக அந்தந்த மாநில அரசுகள் அறிவித்தன. இதை சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவுத் கடுமையாகக் கண்டித்து விமர்சனம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து, மும்பையில் ஏப்ரல் 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, ‘பசுக்களைக் கொல்பவர்களுக்கு தூக்குத் தண்டனையும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் பட்சத்தில், விவசாயிகளை தற்கொலைக்கு ஆழ்த்தும் மாநில அரசுகள் மீது கொலை வழக்கு பதிவுசெய்ய வேண்டும்.
வீடுகளில் வளர்க்கும் பசுக்களை தெய்வமாக மதித்து பாதுகாப்பதுபோல், நாட்டு மக்களுக்கு உணவு கொடுக்கும் விவசாயிகளையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். போதிய மழையின்றி வறட்சியின் காரணமாக பாதிப்படைந்துள்ள விவசாயிகள், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி தொடர்ந்து பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் அந்த மாநிலம் சட்டத்தை மீறி செயல்படுகிறது என்பதாகத்தானே அர்த்தம்.
பசு வதைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் சட்டமியற்ற வேண்டும். பசுக்களை பராமரிக்கும் பொறுப்பை அரசே ஏற்று நடத்த வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் மாட்டிறைச்சி ஏற்றுமதி கணிசமான அளவில் உயர்ந்துவிட்டது’ என்றும் அவர் கூறினார்.�,