டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

Published On:

| By Balaji

வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராம் சில போட்டோக்களை அனுப்பியது.

தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த ஜனவரி 24ஆம் தேதி மாநில மைய குழு கூட்டம் நடைபெற்ற படங்கள் தான் அவை.

.

‘இந்த கூட்டத்தில் என்ன விசேஷம்?’ என்று இன்ஸ்டாகிராம் கேட்ட கேள்விக்கு வாட்ஸ்அப் தனது பதிலை டைப் செய்யத் தொடங்கியது.

தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஜனவரி 24ஆம் தேதி கமலாலயத்தில் தமிழக பாஜகவின் மைய குழு கூட்டம் நடைபெற்றது. Core committee என அழைக்கப்படும் முக்கியமான இந்தக் குழுவின் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் முக்கியமானவை தான்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பொதுச் செயலாளர்கள் ராம சீனிவாசன், கரு. நாகராஜன், மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மேலும் பொன். ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த மைய குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பாஜகவின் போராட்ட வியூகம் பற்றி சிறிது நேரம் விவாதித்த இந்தக் குழுவினர்… அடுத்து தமிழக உள்ளாட்சித் தேர்தலை பற்றி விவாதித்தார்கள். அதுவும் குறிப்பாக சென்னை மாநகராட்சி தேர்தல் பற்றித்தான் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் வார்டு கவுன்சிலர்களுக்குப் போட்டியிட விருப்பம் தெரிவித்த பாஜகவினரை அழைத்து நேர்காணல்கள் நடைபெற்றன.

தமிழகத்தில் இருக்கும் மற்ற மாநகராட்சிகளை விட மிகப்பெரிய மாநகராட்சி சென்னை மாநகராட்சி தான். சுமார் 20 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாநகராட்சியில் அதிமுக கூட்டணியில் பாஜக தேர்தலை சந்திக்க இருக்கிறது.

அதேநரம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பெற்றதைப் போல குறைந்தபட்ச தொகுதிகளைப் பெற்று விடக்கூடாது என்று அந்த கூட்டத்தில் விவாதித்திருக்கிறார்கள்.

‘ சென்னை மாநகராட்சியில் பாஜக 50 வார்டுகளில் போட்டியிட வேண்டும். அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவினர் இதை வலியுறுத்தி பெற வேண்டும். திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் வார்டுகளை விட சில பல மடங்குகள் அதிகமாகவே நாம் கேட்டு வாங்க வேண்டும்.

அதிமுக இதற்கு மறுப்பு தெரிவித்தால் நாம் கடுமையாக நிர்பந்திக்க வேண்டும்.

தற்போது அதிமுக எவ்வித அதிகாரத்திலும் இல்லை. ஆனால் நாம் மத்திய அரசின் ஆட்சியாளராக இருக்கிறோம்.இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது பாஜகவின் ஆதரவு தான் அதிமுகவுக்கு தேவைப்படுமே தவிர..‌‌. அதிமுகவின் ஆதரவு பாஜக-வுக்கு தேவைப்படாது.

ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டத்தில் திருத்தம் வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கொண்டு வர இருக்கிறோம். அந்த சட்டம் வந்துவிட்டால் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநில ஆளும் கட்சிகளின் உத்தரவுகளுக்கு செவி சாய்க்காமல் மத்திய ஆளும் கட்சியான நமது உத்தரவுக்கு தான் செவி சாய்ப்பார்கள். இனி பாஜகவினர் நினைத்தால் எந்த ஐஏஏஸ் அதிகாரி, ஐபிஎஸ் அதிகாரியையும் மாற்ற முடியும் அல்லது ஒரு இடத்தில் நியமிக்க முடியும்.

இந்த அதிகாரம் விரைவில் நமக்கு வந்து விடும் பட்சத்தில் அதிமுகவுக்கு தான் நமது ஆதரவு தேவைப்படும். எனவே சென்னை மாநகராட்சியில் 50 வார்டுகள் பாஜகவிற்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருப்போம்’ என்று பாஜக மைய குழு கூட்டத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு கூட்டணியில் மிகவும் இழுபறிக்குப் பிறகு 20 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக. அதில் பல தொகுதிகள் பாஜக கேட்ட தொகுதிகள் இல்லை. அதே நேரம் வரும் மாநகராட்சி தேர்தலுக்கு முன்னதாகவே ஒன்றிய அரசு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தனது கைக்குள் கொண்டு வந்து தேர்தல் களத்தில் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மூலம் தாங்கள் நினைத்ததைச் செய்வதற்கு பாஜக திட்டம் தீட்டி உள்ளது” என்ற மெசேஜை சென்ட் செய்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share