Yஇரட்டை வேடம் போடும் திமுக: ஓபிஎஸ்

politics

மதுவிலக்கு கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முன் தினம் முதல் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் கட்சிகள் விமர்சனத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் ஓபிஎஸ், திமுக இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கையில், “ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக 2016ஆம் ஆண்டு மதுவிலக்கு அமல்படுத்தப்படும், மது விற்பனை மூலம் வரும் வருவாயை ஈடுகட்ட புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது.

இருப்பினும், திமுகவால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. 2021 ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில், படிப்படியாக மதுவிலக்கை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இவற்றிற்கு முற்றிலும் முரணான வகையில் டாஸ்மாக் மதுபானங்களின் மூலம் வரும் வருவாயை அதிகரிக்கவும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் மதுக்கூடங்களை அமைக்கவும் திமுக அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

மது விற்பனை மூலம் வரும் வருவாயினை ஈடுகட்ட புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று 2016 ஆம் ஆண்டு கூறிய திமுக இப்போது அந்த புதிய திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. இதற்குக் காரணம் திமுகவிடம் எந்தத் திட்டமும் இல்லை என்பதுதான் யதார்த்தம். மக்களை ஏமாற்றுவதற்காகச் சொல்லப்பட்ட ஒரு வாக்குறுதி. இதைத் தமிழ்நாட்டு மக்களும் நன்கு அறிவார்கள்.

2020-2021 ஆம் ஆண்டில் 33 ,811 கோடி ரூபாயாக இருந்த மது விற்பனை மூலமான வருவாய் 2021-2022 ஆம் ஆண்டில் 35 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் என்ற நிலையில், இந்த வருவாயை மேலும் அதிகரிக்கும் வகையில் மதுபானங்களின் விலையைக் குறைந்தபட்சம் 10 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 80 ரூபாய் வரை உயர்த்தி இருக்கிறது. இதன் வாயிலாக 2022-2023 ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் வரும் வரி வருவாய் 40,000 கோடியைத் தாண்டக்கூடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேற்குறிப்பிட்ட இரு வாக்குறுதிகளில் எதையும் செய்யாமல், மதுபானக் கடைகள் மூலம் வரும் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது திமுக அரசு. இது திமுகவின் இரட்டை வேடத்தைத் தோலுரித்துக் காட்டி இருக்கிறது.

அதுமட்டுமின்றி, டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் நடத்தப்படும் பார்கள் மூடப்பட வேண்டுமென்ற தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

மதுவுக்கு அடிமையானவர்கள் மதுப் பழக்கத்திலிருந்து விடுபட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி என அளித்துவிட்டு, அதற்கு எதிரான வகையில், சட்டம்-ஒழுங்கு, பொது அமைதி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றைப் பற்றி துளியும் கவலைப்படாமல், மதுவிலிருந்து வருகின்ற வருமானத்தை அதிகரிப்பதிலும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் மதுக்கூடங்கள் அமைப்பதிலும் தி.மு.க. அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இது மக்களை ஏமாற்றும் செயல்.

தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப, மதுக் கடைகளை படிப்படியாகக் குறைக்கவும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகே உள்ள மதுக்கூடங்களை மூடவேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பினைச் செயல்படுத்தவும், இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *