ஐபிஎல்: தொடரும் தோல்விகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ்!

entertainment

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று (ஏப்ரல் 9) இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதலில் நடந்த 17ஆவது லீக் ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் ஹைதராபாத் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, சென்னை அணி இதுவரை ஆடிய எந்த ஆட்டத்திலும் வெற்றி பெறாமல் நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது
டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பாவும், ருதுராஜ் கெய்க்வாட்டும் களமிறங்கினர். உத்தப்பா 15 ரன்களிலும், ருதுராஜ் கெய்க்வாட் 16 ரன்னிலும் வெளியேறினர்.
சென்னை அணியில் அதிகபட்சமாக மொயீன் அலி 48 ரன்கள் எடுத்தார். அம்பத்தி ராயுடு 27 ரன்கள் எடுத்தார். தோனி 3 ரன்களில் ஆட்டமிழந்தார். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. சன் ரைசர்ஸ் தரப்பில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் வில்லியம்சனும், அபிஷேக் சர்மாவும் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி சென்னைக்கு நெருக்கடி கொடுத்தனர்.
வில்லியம்சன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 75 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இறுதியில் ராகுல் திரிப்பாட்டி அதிரடி காட்டி அணியின் வெற்றியை உறுதி செய்தார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 17.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து இலக்கை கடந்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் சன் ரைசர்ஸ் அணி இரு தோல்விகளுக்கு அடுத்து நடப்பு சீசனில் தன் முதல் வெற்றியை பதிவு செய்தது. நான்காவது போட்டியில் விளையாடிய சென்னை அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை அணியின் தொடர் தோல்வியால், சென்னை அணி ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
**- ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *