பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்தியாவில் மெகா பட்ஜெட் படங்கள் தயாரிக்கத் தயாரிப்பாளர்கள் பலரும் ஆர்வம் காட்டினர். வரலாற்றுச் சம்பவங்கள், புராணங்களைத் தழுவி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் படங்களை உருவாக்கிவருகின்றனர்.
இந்தியத் திரைப்படம் ஒன்றின் அதிகபட்ச பட்ஜெட்டாக உள்ளது ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 2.0 திரைப்படம். ஷங்கர் இயக்கத்தில் உருவான அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்தையும் மிஞ்சும் விதமாக 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மலையாளத்தில் ஒரு படம் உருவாவதாகக் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது.
பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநரும், கதாசிரியருமான எம்.டி.வாசுதேவன் நாயர் மகாபாரதத்தை தழுவி எழுதிய நாவல் ‘ரண்டமூழம்’. இந்த நாவலை ஸ்ரீகுமார் மேனன் இதே பெயரில் இயக்குவதாக இருந்தது. மகாபாரதத்தை பீமனின் பார்வையில் சித்தரிப்பதாக இதன் திரைக்கதை அமைந்திருந்தது. மோகன் லால் பீமனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஒப்பந்தம் செய்யப்பட்ட காலத்திற்குப் பிறகும் படக்குழு படத்தை தொடங்கவில்லை என எம்.டி.வாசுதேவன் நாயர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தொடர்ந்து படத்தின் பணிகள் நடைபெறாத நிலையில் படம் கைவிடப்பட்டதாக லண்டனைச் சேர்ந்த தயாரிப்பாளர் பி.ஆர்.ஷெட்டி தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளருக்கிடையே தொடர்ந்து சரியான புரிதல் நிலவாத சூழலில் படம் கைவிடப்பட்டுள்ளது. பி.ஆர்.ஷெட்டி மகாபாரதப் பின்னணியில் மற்றொரு திரைப்படத்தை விரைவில் தயாரிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.�,