தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஒருநபர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த போராட்டத்தின்போது, காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தினை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஆணையத்தின் விசாரணையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கும் இன்று (பிப்ரவரி 4) ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
அதில், “பிப்ரவரி 25ஆம் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள விசாரணை ஆணைய அலுவலகத்தில் ஆஜராகி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக உங்களுக்கு தெரிந்த விவரங்களை தெரிவியுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த பிறகு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டனர். அவர்கள் யாரென்று எனக்குத் தெரியும்” என்று கடும் கோபத்தோடு கூறினார். மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தியதாக அப்போதே ரஜினிகாந்துக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் தற்போது விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கிறார்.
�,”