மும்பை – தமிழ்நாடு அணிகள் இடையிலான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில், தமிழ்நாட்டை வீழ்த்தி மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
கடந்த சனிக்கிழமை (மார்ச் 2) மும்பை – தமிழ்நாடு அணிகள் இடையிலான அரையிறுதி போட்டி மும்பை எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கியது.
இதில் சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணியும், அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணியும் மோதின.
தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸ் முடிவில், 146 ரன்களுக்கு சுருண்டது.
மும்பையை பொறுத்தவரை துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகூர், முஷீர்கான், தனுஷ் கொடியான் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து தன்னுடைய முதல் இன்னிங்ஸினை ஆடிய மும்பை அணிக்கு ப்ரித்வி ஷா, பூபென் லால்வானி ஜோடி அதிர்ச்சி அளித்தனர். என்றாலும் முஷீர்கான் (55), ஷர்துல் தாகூர் (109), தனுஷ் கொடியான் (89*) நிலைத்து நின்று விளையாடி அபாரமாக ரன்களை குவித்தனர்.
முதல் இன்னிங்ஸ் முடிவில் மும்பை அணி 378 ரன்களை எடுத்தது. இதையடுத்து தன்னுடைய 2-வது இன்னிங்ஸினை தொடங்கிய தமிழ்நாடு அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன் 5 ரன்னிலும் , நாராயண் ஜெகதீசன் எல்.பி.டபிள்யூ முறையில் ரன்கள் ஏதும் எடுக்காமலும், வாஷிங்டன் சுந்தர் 4 ரன்னிலும் அவுட் ஆகினர்.
ஓரளவு மும்பையின் பந்துவீச்சை தாக்குப்பிடித்து விளையாடிய பாபா இந்திரஜித் 70 ரன்களில் அவுட் ஆனார். அதன் பிறகு தமிழ்நாடு பேட்ஸ்மேன்கள் யாரும் 25 ரன்களை தாண்டவில்லை. இதனால் 162 ரன்களுக்கு தமிழ்நாடு அணி ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் மும்பை அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாட்டை வீழ்த்தி, 47-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மும்பை அணி சார்பில் சாம்ஸ் முலானி 4 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகூர், தனுஷ் கொடியான் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தமிழ்நாட்டிற்கு எதிரான இந்த அரையிறுதியில் ஷர்துல் தாகூர், தனுஷ் கொடியான் இருவரும் தங்களது பேட்டிங் மற்றும் பவுலிங்கால் மும்பை அணியின் வெற்றிவாய்ப்பினை உறுதி செய்தனர்.
தற்போது மற்றொரு அரையிறுதி போட்டியில் விதர்பா – மத்திய பிரதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணி மும்பை அணியுடன் இறுதிப்போட்டியில் மோதும்.
இறுதிப்போட்டியில் வெல்லும் அணி ரஞ்சி கோப்பையை தன்வசப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியானது வருகின்ற மார்ச் 10 – 14-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
– இரசிக பிரியா மாணவ நிருபர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்!