ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

entertainment

ஜூன் 26-ம் தேதியை நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவின் ‘சாருகேசி’ நாடக குழுவிற்கு ஒரு மறக்க முடியாத நாளாக மாற்றியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

இது தொடர்பாக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா கூறுகையில், “எனது உறவினர் என்பதைவிட எனக்கு ஒரு நல்ல நண்பராகத்தான் ரஜினிகாந்த் இத்தனை ஆண்டுகளாக என்னோடு பழகிக் கொண்டிருக்கிறார்.

குறிப்பாக எனது நாடகங்களுக்கு அவர் மிகப் பெரிய ரசிகர். நான் தற்போது நடத்தி வரும் ‘சாருகேசி’ நாடகம் பற்றி ஏற்கனவே அவரிடம் கூறியிருந்தேன். அதை தொடர்ந்து திடீர் என்று ஒரு நாள் எனக்கு அவரிடமிருந்து அழைப்பு வந்தது. “நாரத கான சபாவில் நடைபெறும் ‘சாருகேசி’ நாடகத்தைப் பார்க்க நான் வருகிறேன்…” என்றார் ரஜினி.

சொன்னதைப் போலவே மனைவி மற்றும் மகளுடன் வந்த ரஜினி, நாடகத்தை முழுமையாக பார்த்து நாடகம் முடிந்தவுடன் மேடைக்கு வந்து நாடகக் குழுவினர் அனைவரையும் வெகுவாகப் பாராட்டினார்.அப்போது என்னை கட்டிப் பிடித்துப் பாராட்டிய ரஜினி, “இந்த நாடகத்தில் நான் மகேந்திரனை பார்க்கவில்லை, ‘நடிகர் திலகம்’ சிவாஜி அவர்களைத்தான் பார்த்தேன்…” என்று கூறியதைவிட பெரிய பாராட்டு எனக்கு வேறு எதுவும் இல்லை.

அன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் ரஜினியால் எனது நாடகக் குழுவினருடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை. வீட்டுக்கு ஒரு நாள் அனைவரையும் அழைப்பதாக சொல்லிவிட்டு சென்றார்.

அன்று இரவு ‘சாருகேசி’ நாடகத்தின் கதாசிரியரான வெங்கட் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெகு நேரம் பேசியுள்ளார். அந்த நாடகம் அவரிடம் அப்படி ஒரு தாக்கத்தை அவருக்குள் ஏற்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

கடந்த சனிக்கிழமை ஜூன் 25-ம் தேதி திடீரென்று ரஜினி வீட்டில் இருந்து எனக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. “நாளைய தினம் ‘சாருகேசி’ நாடகக் குழுவினரை அழைத்து கொண்டு வீட்டிற்கு வருமாறு” கூறினார்கள்.

அந்த அழைப்புக்கிணங்க ஜூன் 26, ஞாயிற்றுக்கிழமையன்று எங்களது ஒட்டு மொத்தக் குழுவும் ரஜினிகாந்த் அவர்களின் இல்லத்திற்கு சென்றோம். அப்பொழுது எங்களது நாடகக் குழுவில் இருந்த அனைவரையும் தனித்தனியாக ரஜினிகாந்த் பாராட்டினார்.மேலும் அப்போது அவரது நாடக அனுபவங்களையும் எங்களிடம் கூறினார்.

“ஒரு நாடக ஒத்திகைக்கு எனது நண்பர் ராஜ்பகதூர் என்னையும் அழைத்து சென்றிருந்தார். அன்று அந்த நாடகத்தில் துரியோதனனாக நடிக்க வேண்டியவர் வராததால் அவருக்கு பதிலாக என்னை நடிக்கும்படி அந்த குழுவினர் கேட்டுக்கொண்டனர். ஒத்திகையில் எனது நடிப்பைக் கண்டு வியந்த குழுவினர் என்னையே அந்த நாடகத்தில் துரியோதனன் வேடத்தில் நடிக்க வைத்தனர். எனது நடிப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகளும் கிடைத்தது.
அந்தப் பாராட்டுக்களைப் பெற்ற அந்த தருணம்தான் எனது வாழ்க்கையே திசை திரும்பியது. அதுதான் தனது நடிப்புலக வாழ்க்கைக்கு ஆரம்பமாகவும் இருந்தது..” என்று ரஜினி பெருமையுடன் எங்களிடம் சொன்னார்.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி அவர்கள் ஒரு ரசிகராக, எங்களது நாடக் குழுவினரிடம் அன்றைய தினம் பழகியது எங்களது வாழ்வின் மிகவும் சிறப்பான ஒரு தருணம்.” என்று சொல்லி முடித்தார் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா.

**-இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *