தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு எம்.ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாரா சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மிஸ்டர் லோக்கல்’. இந்த படத்தினை ஸ்டூடியோ க்ரீன் புரொடக்சன் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது.
இந்த படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதில் தனக்கு பேசப்பட்டுள்ள 15 கோடி ரூபாய் சம்பளத்தில் 11 கோடி ரூபாய் மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கொடுத்துள்ளதாகவும், பாக்கி நான்கு கோடியை தயாரிப்பு நிறுவனம் தரவில்லை எனவும் ஞானவேல் ராஜா மீது சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் அந்த மனுவில், “எனக்கு வர வேண்டிய சம்பள பாக்கி தொகையை ஞானவேல் ராஜா கொடுக்கும்வரை அடுத்து அவர் வேறு எந்த படங்களிலும் முதலீடு செய்யக் கூடாது. மேலும் பாக்கி சம்பள தொகைக்கான டிடிஎஸ் தொகையையும் அவர் வருமான வரித்துறையில் செலுத்த வேண்டும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன்ஸ் தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்து சிம்பு, விக்ரம் படங்களை தயாரித்து வருவதால் அதில் முதலீடு செய்யவும், ஓடிடி, தியேட்டர் உரிமங்களை உறுதிப்படுத்துவதை தடை விதிக்கவும் மனுவில் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு வரும் 31ஆம் தேதி விசாரிக்கப்படும் என நீதிபதி சுந்தர் தெரிவித்துள்ளார்.
**ஆதிரா**.