மோடிக்கு மெஜாரிட்டியா? மாநிலங்களவையில் திருச்சி சிவா காட்டம்!

Published On:

| By Selvam

“இந்திய மக்கள் பிரதமர் மோடிக்கு மெஜாரிட்டி அளிக்கவில்லை, மாறாக தேர்தல் முடிவுகளில் அவருக்கு தெளிவான ஒரு மெசேஜை சொல்லியிருக்கிறார்கள்” என்று திமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை குழு தலைவருமான திருச்சி சிவா இன்று (ஜூலை 1) தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் குடியரசு தலைவர் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய திருச்சி சிவா, “நாடாளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் ஆறு வார காலம் நடைபெற்றது. பிரதமர் மோடி எட்டு முறை தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஆனால், அவர்களால் தமிழகத்தில் ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியவில்லை. தேர்தல் வெற்றிக்கு சிறப்பாக வியூகமளித்த எங்கள் தலைவர் ஸ்டாலினுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

குடியரசு தலைவர் தனது உரையில் மெஜாரிட்டி அரசு என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய மக்கள் மோடிக்கு மெஜாரிட்டியை கொடுக்கவில்லை, மாறாக தேர்தல் முடிவுகளில் அவருக்கு தெளிவான ஒரு மெசேஜை சொல்லியிருக்கிறார்கள்.

வெறுப்பு அரசியலுக்கு மக்கள் இடமளிக்கவில்லை என்பது தேர்தல் முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ராமர் கோவில் கட்டப்பட்ட பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது.

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் கடந்த முறை வெற்றி பெற்றார். ஆனால், இந்த முறை 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். முந்தைய பாஜக அரசை மக்கள் ஏற்கவில்லை. பொருளாதார ரீதியான பிரச்சனைகளையே மக்கள் முன்னிறுத்துகிறார்கள்.

இங்குள்ள எனது பாஜக நண்பர்களின் முகத்தில் சிரிப்பு இல்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். பாஜக மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர்.

இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் தனது உரையில் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தியாவில் 10 சதவிகித மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும், 2023-ஆம் ஆண்டு நிதி ஆயோக் அறிக்கையில் 15 சதவிகித மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

80 கோடி மக்கள் ரேஷன் கடைகளில் இலவச உணவு பொருட்கள் வாங்கி வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், இந்தியா உலக அளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்று நீங்கள் பெருமையாக பேசி வருகிறீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஈரோடு கிழக்கு போல ஆகக்கூடாது… விக்கிரவாண்டி ஃபார்முலா!

மோடியின் கேரண்ட்டியை நிராகரித்த தமிழக மக்கள்: மக்களவையில் ஆ.ராசா

டிஜிட்டல் திண்ணை: 60 தொகுதிகளில் போட்டி… மமக நிர்வாகக் குழுவில் ஷாக் விவாதம்!

முக்கிய துறைகளின் செயலாளர்கள் மாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share