தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவை ஒட்டி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை தீவுத் திடலுக்கு, டிசம்பர் 29 ஆம் தேதி வந்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவரோடு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், மாநில துணைத் தலைவர் கரு, நாகராஜன் ஆகியோர் வந்தனர். Nirmala Sitharaman complaining to Amit Shah
அஞ்சலி செலுத்திவிட்டு இரங்கல் உரையாற்றிவிட்டு தனது காரை நோக்கி அவர் திரும்புகையில், அவரது காரில் டிரைவரை காணோம். இதனால் ஐந்து முதல் 7 நிமிடங்கள் காத்திருந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதன் பின் தனது துறை சம்பந்தப்பட்ட இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்ட் காரில் ஏறி எம்.ஆர்.சி. நகரில் தான் தங்கியிருக்கும் இடத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அதன் பின் அந்த டிரைவரை தேடிய போலீசார், அவரும் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த போய்விட்டதாக கண்டறிந்து அவரை கண்டித்தனர்.
இந்த விவகாரம் குறித்து மின்னம்பலத்தில் தீவுத் திடலில் தவித்த நிர்மலா சீதாராமன் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு புறப்படும்போது அண்ணாமலையிடம், ‘எனது சென்னை பயணத்துல இதுபோல ஏற்கனவே சில முறை நடந்திருக்கு. எவ்வளவு அலட்சியமா இருக்காங்க பாருங்க. இத பத்தி ஹோம் மினிஸ்ட்ரில கம்ப்ளைண்ட் கொடுக்கணும்’ என்று வருத்தமும் கோபமுமாய் சொல்லிச் சென்றிருக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இதுகுறித்து தமிழ்நாடு பாஜக வட்டாரங்களில் விசாரித்தோம்.
“மத்திய அமைச்சர்கள் மாநிலங்களுக்கு வரும்போது அவர்களின் பயணத் திட்டம், நிகழ்ச்சி நிரல் ஆகியவை முன்கூட்டியே மாநில நிர்வாகத்துக்கும், மாநில காவல்துறைக்கும் அனுப்பப்படும். அதன்படி பயணத்திட்டத்துக்கான வாகனம் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்வது மாநில அரசின் பொதுத் துறையின் வேலை. பாதுகாப்பு கொடுப்பது மாநில காவல்துறையின் வேலை.
நிர்மலா சீதாராமன் சில மாதங்களுக்கு முன் சென்னை வந்தபோது நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துவிட்டு எம்.ஆர்.சி. நகரில் உள்ள வங்கி விடுதிக்கு சென்றிருக்கிறார். அங்கே போகும் வழியில் ஏதோ மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தால் டிரைவர் வேறு பாதையில் திருப்பி ஓட்டியிருக்கிறார். அப்போதும் நிர்மலா சீதாராமன் அதிருப்தி அடைந்திருக்கிறார்.
மத்திய அமைச்சரின் பயணத் திட்டம் முன்கூட்டியே கொடுக்கப்பட்ட நிலையில் பொதுத் துறை சார்பாகவும் போலீஸ் சார்பாகவும் பாதுகாப்பு, பயண வழி ஆகியவற்றில் தடையேதும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இப்போது டிசம்பர் 29 ஆம் தேதியன்று தீவுத் திடலிலும் நிர்மலா சீதாராமன் கார் டிரைவர் வண்டியை போட்டுவிட்டு போய்விட்டிருக்கிறார். இதெல்லாம் நிர்வாக அலட்சியத்தின் விளைவுகள்தான். இதனால் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்பட்டால் யார் பொறுப்பு? மாநில அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்?
ஏற்கனவே கடந்த ஜூன் 10 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தபோது இப்படித்தான் விமான நிலையத்துக்கு வெளியே ஜிஎஸ்டி சாலையில் மின்சாரம் நின்றுபோனது. அப்போதே இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்தன.
தமிழ்நாட்டுக்கு மத்திய அமைச்சர்கள் வரும்போது பாதுகாப்பு தொடர்பாக தமிழக அரசின் நிர்வாக அதிகாரிகள் இன்னும் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். இதை அரசியல் ரீதியாகவும் பாஜக கையிலெடுக்கும்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
மாநில அரசுக்கு ஆதரவு: ஆளுநர் ரவி உறுதி!
Nirmala Sitharaman complaining to Amit Shah
Comments are closed.