அசையா சொத்துகளை பதிவு செய்ய முந்தைய அசல் ஆவணம் மற்றும் வில்லங்கச் சான்றிதழை கட்டாயமாக்கி சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. new law to register immovable properties
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இன்று (ஏப்ரல் 28) பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.
2025ஆம் ஆண்டு பதிவு தமிழ்நாடு திருத்த சட்ட முன்வடிவை கொண்டு வந்தார் அமைச்சர் மூர்த்தி.
அதன்படி, அசையா சொத்து தொடர்பான ஆவணத்தை பதிவு செய்யும் போது சொத்தின் மீது உரிமையுடைய முந்தைய அசல் ஆவணம் மற்றும் ஆவணம் பதிவு செய்யும் தேதிக்கு 10 நாட்களுக்கு முன் பெறப்பட்ட சொத்து தொடர்பான வில்லங்க சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த ஆவணங்களை சமர்ப்பிக்காத ஆவணங்கள் மீது சொத்துகள் பதிவு செய்யப்படமாட்டாது.
மேலும், மூதாதையர்கள் சொத்தாக இருந்து அதற்கான அசல் ஆவணங்கள் இல்லையென்றால் அந்த சொத்து தொடர்பான வருவாய் துறையால் வழங்கப்பட்ட பட்டாவை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் அந்த ஆவணமும் பதிவு செய்யப்படமாட்டாது.
அசல் ஆவணம் தொலைந்துவிட்டால், அந்த ஆவணத்தை கண்டறிய இயலவில்லை என காவல்துறையால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இந்த சட்டமுடிவு தொடர்பாக கருத்துகளை முன்வைக்க அனுமதி கோரினார்.
நாளைய தினம் இந்த மசோதா ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. new law to register immovable properties