”எம்ஜிஆர் – ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்கள்தான் ஏழைகளுக்காக வாழ்ந்து மறைந்தவர்கள்” என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை வானகரத்தில் அதிமுக சார்பில் இன்று (டிசம்பர் 19) கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் கிறிஸ்தவ பேராயர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய அவர், “ ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு’ என்று கூறியவர் இயேசு. அவர் பிறந்த தினத்தை உலகம் முழுதும் கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகிறோம். இயேசு பிறந்த தினம் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் மகிழ்ச்சி இல்லை. உலகில் அனைவருக்கும் மகிழ்வான நாளாகும்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு செய்த நன்மைகள் ஏராளம். ஒரு நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் கல்வி அவசியம். கல்விக்கு முக்கியம் கொடுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதிமுக கொண்டு வந்த திட்டத்தை இனி எந்த அரசாலும் கொண்டுவர முடியாது.
ஜெயலலிதா முல்லைப் பெரியாறு அணையை அமைத்த கிறிஸ்தவர் பென்னிகுயிக்கிற்கு மணிமண்டபம் அமைத்து பெருமைப்படுத்தினார். கிறிஸ்தவர் மகளிர் சுய உதவி குழு கொண்டு வந்தவர் ஜெயலலிதா.
தமிழகத்தில் எம்ஜிஆர் – ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்கள்தான் ஏழைகளுக்காக வாழ்ந்து மறைந்தவர்கள். அவர்கள் போல் நாமும் வாழ வேண்டும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
அதிகளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள்: அறிவுறுத்திய உதயநிதி
அண்ணாமலை வாட்ச்: உண்மையிலேயே ரஃபேல் பாகங்கள் மூலம் தயாரிக்கப்பட்டதா?
